சரக்கடிக்கலைனா படிக்க முடியாது.. போட்டிக்கு சென்ற இடத்தில் மாணவிகளிடம் அத்துமீறல்! சிக்கிய பிடி சார்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் மாணவிகளை விளையாட்டு போட்டிக்கு அழைத்துச் சென்ற இடத்தில் உடற்கல்வி ஆசிரியர் மாணவிகளிடம் அத்துமீறியதாக குற்றச்சாட்டு எழுந்த சம்பவத்தில் உடற்கல்வி ஆசிரியர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் மாணவிகளை கட்டாயப்படுத்தி மதுகுடிக்க வைத்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி கிங்ஸ்லின் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி பாலியல் தொல்லை, திருச்சி என்ஐடி விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவங்களின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் வால்பாறையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கல்வி கூடங்கள் பாலியல் தொல்லைக் கூடங்களாக மாறி வருவதாக பெற்றோர் மத்தியில் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், திருச்செந்தூர் அருகே தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் மாணவிகளை விளையாட்டு போட்டிக்கு அழைத்துச் சென்ற இடத்தில் உடற்கல்வி ஆசிரியர் மாணவிகளிடம் அத்துமீறியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் தனியார் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் அதே பகுதியைச் சேர்ந்த பொன்சிங். இவர் கடந்த மாதம் 22 ஆம் தேதி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்காக பள்ளி மாணவிகள் 5 பேரை தூத்துக்குடி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த அறையில் மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்க கூடாது என்று மிரட்டியுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். பெற்றோர்கள் பள்ளியில் இதுகுறித்து முறையிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இதுகுறித்து முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மதியம் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் மாவட்ட கல்வி அலுவலர் உள்பட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ், வட்டாச்சியர் பாலசுந்தரம் உள்பட அதிகாரிகள் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் தலைமறைவாகி உள்ளார்.
பெற்றோர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, கல்வி அதிகாரிகள் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கோவையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. போலீசார் அங்கு விரைந்துள்ளனர். அவரை விரைவில் அங்கிருந்து பிடித்து வர நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பெற்றோர்கள் சமாதானம் அடைந்து பள்ளி வாசலில் காத்திருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் கோவை மாவட்ட காவல்துறையினர் இணைந்து உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்ஸோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணைக்காக உடற்கல்வி ஆசிரியரை திருச்செந்தூர் அழைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications