தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு.. நேரில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினிகாந்த் மனு
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் வரும் 25-ஆம் தேதி நேரில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினிகாந்த் மனுதாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி கடந்த 2018-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த முற்றுகைப் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 2 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது.
இந்த ஆணையம் இதுவரை 18 கட்ட விசாரணையை நடத்தி முடித்துள்ளது. இது வரை 704 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு 445 பேர் சாட்சியங்களாக விசாரிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 630 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்தவர்கள் ஆகியோர் விசாரணைக்குள்படுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தோருக்கும் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சில சமூக விரோதிகளே காரணம். போலீஸை மட்டும் குறை கூறுவது தவறு என பேட்டி அளித்தார். இதையடுத்து வரும் 25-ஆம் தேதி ரஜினிகாந்த் ஆஜராகுமாறு ஆணையம் ரஜினிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் 25-ஆம் தேதி நேரில் ஆஜராவதிலிருந்து ரஜினி விலக்கு கேட்டுள்ளார். தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக விலக்கு கேட்டு அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ரஜினி மனு தாக்கல் செய்துள்ளார்.
நான் நேரில் வருகை தந்தால் பொதுமக்களுக்கு அசவுகரியங்கள் ஏற்படும். எனவே நான் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என அவர், மனுவில் குறிப்பிட்டுள்ளார். தனக்கான கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தர தயாராக இருப்பதாகவும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் ரஜினி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications