“மரியாதை இல்லை”.. சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி மா.செ! திடீர் விலகல்!
தூத்துக்குடி: நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் 32 பேர், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சிக்காக தொடர்ந்து 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தங்களுக்கு கட்சியில் சிறிய மரியாதை கூட இல்லை என நாதகவில் இருந்து விலகிய சுப்பையா பாண்டியன் தெரிவித்துள்ளார். நாதகவில் இருந்து விலகியுள்ள சுப்பையா பாண்டியன், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் நாதக சார்பில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் பலர் கட்சியில் இருந்து விலகியிருந்தனர். அதன் பின்னர் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுகுமார் விலகினார். இருவரும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அதைத்தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் கட்சியில் இருந்து விலகி, சீமான் பேசிய தனிப்பட்ட கருத்துக்கள் தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறினார். அதேபோல், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டனும், சீமான் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு கட்சியில் இருந்து விலகினார்.
நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இளவஞ்சி விலகியுள்ளார். கட்சித் தலைமையின் செயல்பாடுகள் தனக்கு பிடிக்கவில்லை என்றும், குறிப்பாக பெண்களுக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கியத்துவம் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நாம் தமிழர் கட்சியின் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் மற்றும் 10க்கும் மேற்பட்ட நாதக நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடுவதால் தொடர் தோல்வியைச் சந்திப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications