கூட்டுறவு வங்கிகளில் 30 லட்சம் வரை கடன்! தூத்துக்குடி கலெக்டர் குட் நியூஸ்.. யார் விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி: சிறுபான்மையினருக்காக ரூ.30 லட்சம் வரை பொருளாதார மேம்பாட்டு கடன் வழங்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில், கூட்டுறவு வங்கிகள் மூலம் பொருளாதார மேம்பாட்டு கடன் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
சிறுபான்மையினர் நலத்திட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் தொழில் தொடங்குவதற்கும், சுயதொழில் செய்து வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்காகவும் வங்கிக் கடன் பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு கடன் வழங்கப்படுவதாகவும், அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் வரை கடன் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- "தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், விராசாத் கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம் மற்றும் கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் மற்றும் வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம, நகர்ப்புறங்களில் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 2-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம, நகர்ப்புறங்களில் ரூ.8 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்.
எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும்
திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
எப்படி விண்ணப்பிப்பது?
திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 10 சதவீதம், பெண்களுக்கு 8 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1.50 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம், மத்திய கூட்டுறவு மற்றும் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க கூட்டுறவு வங்கிகளில் பெற்று பூர்த்தி செய்து, சிறுபான்மையினர் மதச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, திட்ட அறிக்கை, கூட்டுறவு வங்கி கிளைகள் கோரும் தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications