“அடித்து பழகிகோங்க..” காவலர்களின் கோர முகம்! சாத்தான்குளம் வழக்கில் தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு
தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் கொரோனா தொற்று காலத்தில், விதிகளை மீறியதாக காவல்துறையால் அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டதில், தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கில் 9 காவலர்கள் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். இதனையடுத்து இன்று அவர்களுக்கான தண்டனை விவரம் வெளியாக வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், ஏப்.8ம் தேதிக்கு தண்டனை விவரம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
காவல்துறை தாக்குதலால்தான், தந்தையும், மகனும் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று விசாரணையில் உறுதியானது. இந்நிலையில், குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விவரம் வெளியாகிறது.

வழக்கின் பின்னணி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்திருக்கின்றனர். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது. ஆனால், இந்த விதிகளை மீறியதாக கைது செய்திருந்தனர். இந்த கைது நடவடிக்கையின்போது, காவல்துறையினரை திட்டிவிட்டு, அவர்கள் தாங்களாகவே தரையில் புரண்டனர். இதன் காரணமாக அவர்களுக்கு ஊமை காயம் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது.
ஆனால், கிளை சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வழக்கு விசாரணையில், தந்தையும் மகனும் நமக்கு சிக்கியிருக்கிறார்கள் அடித்து பழகிக்கொள்ளுங்கள் என்று காவல்துறையினர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. குற்றம்சாட்டப்பட்ட முதல் நபராக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜா, சாமதுரை, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் காவலர் பால்துரை மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் மீதமுள்ள அனைவரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது. குற்றவாளிகளின் சொத்து மதிப்பு, மனநிலை குறித்து மத்திய மாநில அரசுகளிடம் அறிக்கை கேட்டிருக்கிறது. இந்நிலையில் இன்று குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட இருந்த நிலையில், ஏப்.8ம் தேதிக்கு தண்டனை விவரம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications