சாத்தான்குளம் மரணம்.. 1 மணி நேரம் கேள்வி கேட்ட நீதிபதி.. 3 காவலர்களுக்கு ஜூலை 16 வரை நீதிமன்ற காவல்!
தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 3 காவலர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரண வழக்கு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சிபிசிஐடி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பலியானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. நேற்று எஸ்ஐ ராகுகணேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் மூன்று போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

தீவிர விசாரணை
இந்த வழக்கை சிபிசிஐடி தீவிரமாக விசாரித்து வந்தது.நேற்று அதிரடியாக இந்த வழக்கில் எப்ஐஆர் மாற்றப்பட்டது. கஸ்டடி மரணம் என்பதை சிபிசிஐடி கொலை வழக்காக பதிவு செய்தது. அதோடு நேற்று இரவே இந்த வழக்கில் எஸ்ஐ ரவிகணேஷ் கைது செய்யப்பட்டார். இவரிடம் சிபிசிஐடி தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். நேற்று இரவே தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் ஆஜர்படுத்தப்பட்டு அன்று இரவே அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மூன்று போலீசார்
இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து அடுத்தடுத்து மூன்று போலீசார் இதில் கைது செய்யப்பட்டனர். முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் சிபிசிஐடி மூலம் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். இன்று காலையில் இருந்து இவர்களிடம் சிபிசிஐடி விசாரணை செய்தது. மொத்தம் 18 மணி நேரம் சிபிசிஐடி இவர்களை விசாரணை செய்தனர்.

மருத்துவ சோதனை
இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இவர்களுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் முன் இவர்கள் மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு இருந்தது என்பதால் போலீசார் அங்கே குவிக்கப்பட்டு இருந்தனர். நீதிபதி ஹேமா இவர்கள் மூவரிடமும் விசாரணை நடத்தினார்.இந்த மூன்று போலீஸாரிடமும் நீதிபதி ஹேமா பல கேள்விகளை கேட்டார்.

வழக்கமான கேள்விகள்
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கேள்விகளை கேட்டார். நீதிமன்ற காவலுக்கு முன் கேட்கப்படும் வழக்கமான கேள்விகள் கேட்கப்பட்டது. முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டது. இவர்களுக்கு ஜூலை 16ம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பேரூராணி சிறைச்சாலையில் இவர்கள் மூவரும் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர்












Click it and Unblock the Notifications