சாத்தான்குளம் மரண வழக்கு.. எஸ்.ஐ ரகுகணேஷ் கைது.. மேலும் 2 போலீசாரிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை!
கோவில்பட்டி: சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பான வழக்கில் சாத்தான்குளம் எஸ்ஐ ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள போலீசார் நாளை காலைக்குள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்ப்டுகிறது.
சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேர் மரணம் அடைந்தது நாடு முழுக்க விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி சிறையிலேயே மர்ம மரணம் அடைந்தனர்.
லாக்டவுன் நேரத்தில் கடை வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட இவர்கள் மோசமாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை சென்னை ஹைகோர்ட்டின் மதுரை கிளை விசாரித்து வருகிறது.
தண்ணீர் கேட்டு துடித்த ஜெயராஜ்.. ரத்தம் வடிய அடித்தனர்.. சாத்தான்குளம் பெண் கான்ஸ்டபிள் கணவர் பேட்டி
சிபிசிஐடி இன்று விசாரணை
இந்த வழக்கை இன்றில் இருந்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்காக சிபிசிஐடி 12 குழுக்களை நியமித்து காலையில் இருந்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இன்று கோவில்பட்டி சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர். அதேபோல் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் விசாரித்தனர். பின் சாத்தான்குளம் போலீஸ் நிலைய எழுத்தரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
கொலை வழக்கு
இவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இன்று இரவிற்குள் முக்கிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அதிரடி திருப்பமாக சாத்தான்குளம் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ் உட்பட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்பு இருந்த கஸ்டடி மரணம் என்ற எப்ஐஆரை கொலை வழக்கு என்று மாற்றி பதிவு செய்தனர்.
இன்று கைது
மேலும் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மீதும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். சாத்தான்குளம் வழக்கில் இது அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வழக்கில் சாத்தான்குளம் எஸ்ஐ ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இவரை மருத்துவ சோதனைக்கு பின் சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அதன்படிஎஸ்ஐ ரகு கணேஷ் மாஜிஸ்டிரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.கோவில்பட்டி மாஜிஸ்டிரேட் முன் ரகுகணேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.
எங்கே இருக்கிறார்
எஸ் ஐ ரகுகணேஷ் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்தவர். ஆனால் இவரை சிபிசிஐடி போலீசார் திருச்செந்தூரில் உள்ள ஆத்தூரில் வைத்து பிடித்து இருக்கிறார்கள். இன்னும் மீதம் உள்ள 5 போலீசாரை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறார்கள். தற்போது சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
குவிப்பு
நெல்லை டிஐஜி, எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் தற்போது சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இருக்கிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் 2 போலீசார் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். காலைக்குள் அனைத்து போலீசாரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது. தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜாவிடம் விசாரணை நடப்பதாகவும் தகவல்கள் வருகிறது. இன்னும் இரண்டு போலீசார் சிக்கவில்லை.