சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்.. காத்திருப்பு பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சஸ்பெண்ட்!
தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர்கள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ். இவர்கள் ஊரடங்கு நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட சிறிது நேரம் கூடுதலாக கடையை திறந்து வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து இவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீஸார் இவர்களை கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
காவலர்கள் தாக்கியதால் இருவரும் மரணமடைந்ததாக உறவினர்கள் புகார் கூறினர். உயிரிழப்பு சம்பவத்தை எதிர்க்கட்சிகளும் கண்டித்து வருகின்றனர். இந்த இருவரையும் கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தினர்.
அப்போது சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்பு பட்டியலிலும் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 4 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் வடசேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெர்னாட் சேவியரை சாத்தான்குளம் காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக நியமித்து நெல்லை சரக காவல் துறை துணைத் தலைவர் பிரவீன் குமார் அபிமன்யு உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications