மக்களை சந்திக்காத.. தேர்தலில் நிற்காத.. நிர்மலா சீதாராமனுக்கு எதுக்கு அமைச்சர் பதவி? -சீமான் கேள்வி
தூத்துக்குடி: மக்களை சந்திக்காத, தேர்தலில் நிற்காத, நிர்மலா சீதாராமனுக்கு எதற்கு மத்திய அமைச்சர் பதவி என நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் மக்களை சந்திக்காத ஜெய்சங்கருக்கு ஏன் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்றும் வினவிய சீமான், மக்களை சந்தித்து தேர்தலில் போட்டியிட்டு வென்ற எத்தனையோ பேர் வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இருக்கும் சூழலில் இப்படி உயர் பதவிகள் வழங்குவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கே வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள், குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய வாக்களிக்க மாட்டார்களா என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய சீமான், குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்கள் நேரடியாக வாக்களிக்கும் முறையை கொண்டு வர வேண்டும் என புதுக் கோரிக்கையை விடுத்தார். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மட்டும் குடியரசுத் தலைவருக்கு ஓட்டு போட்டால் போதுமா, இது ஜனநாயக முறையா என சீமான் வினவினார்.
சங்கி என்ற வார்த்தை ஒன்றும் இழிசொல் இல்லை என்றும் ரஜினிகாந்த் சங்கியாக இருந்தால் என்ன தப்பு எனவும் வினவிய சீமான், ரஜினிகாந்தை ஒரு கலைஞனாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர அவரவர் விருப்பு வெறுப்புடன் பொருத்திப் பார்க்கக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார். தமிழகம் புதுச்சேரி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள், 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.
பிப்ரவரி மாதம் இறுதிக்குள் நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்துவிடுவேன் எனக் கூறியுள்ள சீமான், இதன் மூலம் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருவதை உணர்த்தியுள்ளார். தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறினார்.












Click it and Unblock the Notifications