பரபரத்த கடம்பூர்! தேர்தல் அதிகாரிகளை சுற்றி வளைத்த மக்கள்.. பேரூராட்சி தேர்தல் ரத்து! என்ன நடந்தது
தூத்துக்குடி: நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், மாநில தேர்தல் ஆணையம் முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெறுகிறது.

திமுகவினர் வேட்பு மனு நிராகரிப்பு
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 1, 2 மற்றும் 11 வார்டுகளில் தலா இருவர் மட்டுமே வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த ஜெயராஜ், சண்முகலட்சுமி, சின்னத்துரை ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முன்மொழிந்தவர்கள் கையெழுத்து போலியானது எனத் தெரிய வந்ததால் கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் திமுகவினரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

சுயேச்சை வேட்பாளர்கள்
இதையடுத்து சுயேச்சை வேட்பாளர்களான எஸ். வி. எஸ். பி. நாகராஜா, ராஜேஸ்வரி மற்றும் சிவகுமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகும் சூழல் உருவானது. மற்ற 9 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் உறுதியானது. இந்நிலையில் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான திங்கள்கிழமையன்று பேரூராட்சி நோட்டீஸ் போர்டில் மாலை 6 மணி அளவில் 1 முதல் 6 வார்டுகளில் வேட்பாளர்கள் விலகல் ஏதுமில்லை எனப் படிவம் 8 ஒட்டப்பட்டது.

முற்றுகை
இதையடுத்து 1, 2 மற்றும் 11 வார்டுகளில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான மக்களுடன் திரண்டு வந்து தாங்கள் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு செய்ய வேண்டும் என்றும் அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கடம்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேஷ் குமாரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதிகாரிகள் சிறைபிடிப்பு
இருப்பினும், உரியப் பதில் கிடைக்காத காரணத்தால் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், அதிகாரிகளை 8 மணி நேரம் சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் அசாதாரண சூழல் உருவானது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளைக் கண்டித்து மக்கள் தொடர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து 200க்கும் மேற்பட்ட போலீசார் அங்குக் குவிக்கப்பட்டனர்.

தேர்தல் ரத்து
இந்தச் சூழலில் நள்ளிரவு ஒரு மணியளவில் கடம்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு நகல் ஒட்டப்பட்டது. அந்த அறிவிப்பில், "மாநில தேர்தல் ஆணையத்தால் சொல்லப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் கடம்பூர் முதல் நிலை பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் தேர்தல் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

13 மணி நேர போராட்டம்
மேலும், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆணையிடப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து காலை 10 மணி முதல் இன்று அதிகாலை வரை நீடித்த 13 மணிநேரம் போராட்டம் முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications