தூத்துக்குடி சென்ற முதல்வர் பழனிச்சாமி விமானத்தில் திடீர் கோளாறு.. பாதியில் சென்னை திரும்பினார்!
தூத்துக்குடி சென்ற முதல்வர் பழனிச்சாமியின் தனி விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டு இருக்கிறது.
சென்னை: தூத்துக்குடி சென்ற முதல்வர் பழனிச்சாமியின் தனி விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அவரது விமானம் உடனடியாக சென்னை திருப்பி விடப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார். கன்னியாகுமரியில் நடக்க உள்ள அரசு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். தமிழக அரசு சார்பாக இந்த விழா நடக்கிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
தூத்துக்குடி சென்றார்
இதற்காக இன்று காலை புறப்பட்ட தமிழக முதல்வர் தூத்துக்குடி செல்வதாக இருந்தது. தூத்துக்குடியில் அவர் சிறிய அரசு விழா ஒன்றில் கலந்து கொள்ள இருந்தார். அதன்பின் அவர் கன்னியாக்குமரி செல்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் என்ன
ஆனால் முதல்வர் சென்ற விமானம் நடுவானில் பிரச்சனைக்கு உள்ளாகி உள்ளது. தொழில்நுட்ப பாதிப்பு காரணமாக விமானத்தில் கோளாறு ஏற்பட்டது .விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முதல்வர் பழனிச்சாமி சென்ற விமானம் பாதியில் திரும்பியது
பிரச்சனை என்ன
முதல்வரின் தனி விமானம் ஆகும் அது. ஆனால் அதில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டது என்று தெரியவில்லை. இந்த கோளாறு காரணமாக முதல்வருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
காரில் செல்கிறார்
இதையடுத்து முதல்வர் பழனிச்சாமி சென்னைக்கு உடனடியாக திரும்பினார். சென்னையில் இருந்து புதிய விமானம் மூலம் மதுரை செல்கிறார். மதுரையில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரி செல்கிறார். இன்று மதியம் குமரியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் விழாவில் முதல்வர் கலந்து கொள்கிறார்.