தூத்துக்குடி தம்பதி கொலை மது போதையில் நடந்த கொடூரம்.. இனியாவது டாஸ்மாக்கை மூடுங்க.. சீமான் ஆவேசம்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இளம் காதல் தம்பதியினரை சிறிதும் இரக்கமின்றி கொன்ற கொடூரர்களுக்கு சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும், இத்தகைய குற்றங்கள் புரிய அடிப்படை காரணமாக உள்ள மதுக்கடைகளை இனியாவது இழுத்து மூட வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் திருமணமாகி 3 நாட்களே ஆன காதல் ஜோடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்ணின் உறவினர்கள் இந்த கொலையில் ஈடுபட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது உறவினர்கள் 3 பேரையும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் கைது செய்துள்ளனர். தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த கொடூரச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி முருகேசன் நகரில் காதல் திருமணம் செய்த இளம் தம்பதியினர் மாரிச்செல்வம் - கார்த்திகா ஆகியோரை வர்க்க ஏற்றத்தாழ்வு காரணமாக பெண்ணின் தந்தையே கூலிப்படையை வைத்து பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வாழ வேண்டிய இளம் தளிர்களைத் துளிர்க்கும் முன்பே கருக்கிய கொடூரத்தைச் செய்ய பெற்றவருக்கு எப்படி மனம் வந்தது என்றே புரியவில்லை.
கொல்லப்பட்ட இரண்டு பிள்ளைகளின் முகமும் கண்ணை விட்டு அகலாமல், உறங்க விடாது நெஞ்சைக் கனக்க செய்கிறது. நாமெல்லாம் நாகரீகம் அடைந்த சமூகத்தில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அன்பைப் போதிக்கும் எத்தனை மதங்கள் தோன்றிய பின்னும், அறிவைப் புகட்டும் எத்தனை நீதி நூல்கள் படைத்த பின்னும், எத்தனை எத்தனை சமூக சீர்திருத்தவாதிகள் பிறந்த பின்னும், இன்னும் மண்ணில் இத்தகைய கொடுமைகள் நிகழ்ந்து வருவது சமூக அவலத்தின் உச்சமாகும்.
கொலையாளிகள் அனைவரும் 18 முதல் 20 வயதிற்குள்ளான இளைஞர்கள் என்பதும் இக்கொடூரச் செயலில் ஈடுபடும்போது மதுபோதையில் இருந்துள்ளனர் என்பதும் திமுக அரசு விற்கும் மதுதான் அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படையாக உள்ளது என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது.
ஆகவே, தமிழ்நாடு அரசு சிறிதும் மனச்சான்று இன்றி இக்கொடிய குற்றத்தைப் புரிந்த கொடூரர்களை விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும், இத்தகைய குற்றங்கள் புரிய அடிப்படை காரணமாக உள்ள மதுக்கடைகளை இனியாவது இழுத்து மூடி, உடனடியாக பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி இனியேனும் இது போன்ற கொடுமைகள் நிகழாது தடுத்திட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications