காட்டுக்குள் போன மாணவி.. துண்டு துண்டான உடலைப் பார்த்து கதறிய குடும்பம்! துடிதுடித்த தூத்துக்குடி!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தார்.
குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக அவர்களின் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், நேற்று மாலை அந்த மாணவி இயற்கை உபாதைக்காக கிராமத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவி காட்டுப்பகுதிக்குச் சென்ற பிறகு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதற்றமடைந்தனர். முதலில் அருகிலுள்ள பகுதிகளில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு அவர்கள் காவல்துறையினரை அணுகி புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக மாணவியை தேடும் பணியில் இறங்கினர். கிராமம் சுற்றியுள்ள பகுதிகளில் மற்றும் காட்டுப்பகுதிகளில் போலீசார் தீவிரமாக தேடுதல் நடத்தினர். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு, வேடநத்தம் கிராமத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் இன்று காலை ஒரு பெண் சடலம் கிடப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அந்த சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் விசாரணையில், அந்த சடலம் நேற்று காணாமல் போன 12ம் வகுப்பு மாணவியின் சடலம்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் மாணவி முதலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மாணவி மீது நடந்ததாக கூறப்படும் இந்த கொடூர சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி கொலை செய்யப்பட்ட தகவல் வெளிவந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அரசியல் ரீதியாகவும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த கொலை சம்பவத்தின் பின்னணி என்ன? இந்த கொடூர செயலை செய்தது யார்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் கண்டுபிடிக்கப்பட்ட காட்டுப்பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாணவியின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இது முன்கூட்டியே திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications