எங்களுக்கு சங்கம் வேண்டும்.. வீடியோ வெளியிட்ட காவலருக்கு கட்டாய ஓய்வு.. தூத்துக்குடி எஸ்பி உத்தரவு
தூத்துக்குடி: எனது பெயர் ரவுடி பட்டியலில் உள்ளது. காவலர்களுக்கு சங்கம் அமைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்ட தூத்துக்குடி மாவட்டம் காவலருக்கு கட்டாய ஓய்வு வழங்கி மாவட்ட எஸ்பி அதிரடியாக உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் செல்லத்துரை. இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோ மூலம் அவர் தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு சில கோரிக்கைகளை வைத்தார். அந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி விவாதமானது.
அந்த வீடியோவில் செல்லத்துரை, ‛‛தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு வணக்கம். எனது பெயர் சொந்த மாவட்டமான திருநெல்வேலி மானூர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இணைத்துள்ளனர். இதனை நீக்க மனு கொடுத்துள்ளேன். ஆனால் தனக்கு மேல் உள்ள உயரதிகாரிகள் அதனை கண்டுக்கொள்ளவில்லை.
இதனால் காவல்துறையில் பணியாற்றும் என்னை போன்ற காவலர்களின் நலன்களை பேண சங்கம் அமைத்தால் தான் சரியாக இருக்கும். இதுபற்றி முதல்வர் ஆலோசித்து சங்கம் அமைக்க வேண்டும். குறிப்பாக பெண் காவலர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு சோதனைகளை அனுபவிக்கிறார்கள். இதனால் சங்கம் அமைப்பது அவசியம். இல்லாவிட்டால் தற்கொலை செய்யும் காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பே இல்லை '' என்றார்.
இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செல்லத்துரையை அழைத்து விசாரணை நடத்தியது. அப்போது அதிகாரிகளிடம் அவர் சரியான முறையில் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. அதோடு செல்லத்துரை திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் பணியாற்றியபோது போலீஸ் யூனிபார்ம் அணியாமலும், உயரதிகாரிகளுக்கு உரிய மரியாதை கொடுக்காமலும் இருந்ததாக ஏற்கனவே புகார் இருந்தது.
அதோடு செல்லத்துரை சார்பில் ஏற்கனவே விருப்ப ஓய்வு வேண்டும் என காவல் துறை உயரதிகாரிக்கு மனு வழங்கப்பட்டு இருந்தார். இதையடுத்து தற்போதைய வீடியோவை தொடர்ந்து செல்லத்துரைக்கு கட்டாய ஓய்வு வழங்கி தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் ஆணை வெளியிட்டுள்ளார். அதில், அதிகாரிகளுக்கு உரிய மரியாதை வழங்காதது மற்றும் வலைதளங்களில் சர்ச்சை வீடியோ வெளியிட்டுள்ளதாலும், விருப்ப ஓய்வு கேட்டதாலும் செல்லத்துரைக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் கட்டாய ஓய்வில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செல்லத்துரையிடம் இதுபற்றி கேட்டபோது, ‛‛நான் சட்டப்படிப்பை படித்துள்ளேன். வழக்கறிஞராக மக்களுக்கு சேவை செய்ய முடிவு செய்துள்ளேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications