தூத்துக்குடியை உறைய வைத்த மாணவி படுகொ**.. படபடவென ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்! 20வது நாளிலேயே சம்பவம்!
சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவம் தொடர்பாக தர்ம முனீஸ்வரன் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணையை துரிதமாக மேற்கொண்டு வரும் தூத்துக்குடி போலீசார், வழக்கின் குற்றப்பத்திரிகையை 20 நாட்களுக்குள் தாக்கல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்து இரவு வேளையில் வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக் கழிக்க சென்ற நிலையில் காணாமல் போனார்.
கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஒரு நாள் முழுவதும் தேடிய நிலையில் கடந்த 11ஆம் தேதி அதே காட்டுப் பகுதியில் உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் மாணவியின் உடல் மீட்கப்பட்டது.

தூத்துக்குடி மாணவி கொலை
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் 10 தனி படைகள் அமைக்கப்பட்டது.
கொலையாளி யார்?
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் யார்? என்பது குறித்து மாணவியின் உறவினர்கள், கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அந்தப் பகுதி அருகே வேலை பார்த்த வட மாநில தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. மேலும், கிராமம் முழுவதும் வீடு வீடாக சல்லடை போட்டு விசாரணை நடத்தினர். இருப்பினும் குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை தொடர்ந்து திணறி வந்தது.
காவல்துறை விசாரணை
இந்த நிலையில் இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் ஆறு பேருக்கு டிஎன்ஏ மருத்துவ பரிசோதனையும் காவல்துறையினர் எடுத்து அதன் முடிவுகளுக்கு காத்திருந்தனர். இந்த நிலையில் வேடநத்தம் கிராமம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு காற்றாலையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சம்பவம் நடந்த அன்று அந்தப் பகுதியில் ஒரு இருசக்கர வாகனம் இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அந்த இருசக்கர வாகனத்தின் நம்பரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கண்டுபிடித்ததில் அந்த இருசக்கர வாகனம் ராம்நாடு மாவட்டம் பார்த்திபனூர் பகுதியில் இருந்து மர்ம நபரால் திருடி கொண்டுவரப்பட்டது தெரிய வந்தது.
தர்ம முனீஸ்வரன்
அந்த இருசக்கர வாகனம் திருடு போயிருப்பதாக காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் சென்ற காவல்துறையினர் அங்கே இருசக்கர வாகன சிசிடிவி குறித்து ஆய்வு செய்ததில் அந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி வந்திருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த 30 வயதான தர்ம முனீஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
டிஎன்ஏ மாதிரி
தொடர்ந்து தர்மா முனீஸ்வரனின் டிஎன்ஏவும் பிளஸ் 2 மாணவியின் நகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தசை சிதறல்களின் டிஎன்ஏ மாதிரியும் ஒத்துப்போனது. இதை அடுத்து குற்றவாளி தர்ம முனீஸ்வரன் தான் என்பதை உறுதி செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்த நிலையில் வழக்கின் முழுமையான குற்றப்பத்திரிக்கையானது தயாரிக்கப்பட்டு விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வரும் விளாத்திகுளம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் தூத்துக்குடி போக்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
குற்ற பத்திரிக்கை
மாணவி கொலை சம்பவம் நடந்து 20 நாட்களில் குற்றவாளி போலீசார் கைகளில் சிக்கி உள்ளதோடு குற்ற பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாளை மறுநாள் குற்றவாளியான தர்ம முனீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது குற்றப்பத்திரிகை அவரிடம் வழங்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications