தூத்துக்குடி- வேளாங்கண்ணி .. திருச்செந்தூர்-சென்னை ரயில்.. ரயில்வே மேலாளருக்கு கனிமொழி எம்பி கடிதம்
தூத்துக்குடி: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி எம்பி கனிமொழி தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளருக்கு மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு திருச்செந்தூர்- சென்னை இடையே நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக புதிய நேரடி ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாக உள்ள தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் திருச்செந்தூரில் சாமி பார்க்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் திருப்பதி என்று சொல்லும் அளவிற்கு கூட்டம் அதிகமாக இருக்கிறது. சாமி பார்க்க எப்போது போனாலும் தவமே இருக்க வேண்டும் என்கிற அளவில் பக்தர்கள் கூட்டம் வருகிறது. இதனால் திருச்செந்தூருக்கு தினசரி நேரடி ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் தெற்கு ரயில்வே இந்த கோரிக்கைக்கு இதுவரை செவிசாய்க்கவில்லை..

இதனிடையே தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளருக்கு கனிமொழி எம்பி அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு செல்கின்றனர். குறிப்பாக செப்டம்பர் மாதம் நடைபெறும் திருவிழா மற்றும் மே மாத கோடை விடுமுறையில் அதிகமானோர் செல்கின்றனர். இந்த பக்தர்களின் வசதிக்காக தூத்துக்குடி- வேளாங்கண்ணி இடையே நேரடி வாராந்திர ரயில் இயக்க வேண்டும். தூத்துக்குடி- புதுச்சேரி இடையே எந்த ரயில் வசதியும் இல்லாததால் இந்த ரயிலை புதுச்சேரி வரை நீட்டிக்க முடியும்.
திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு திருச்செந்தூர்- சென்னை இடையே நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டி வழியாக புதிய நேரடி ரயில் இயக்க வேண்டும். திருச்சி - காரைக்குடி, காரைக்குடி - விருதுநகர், விருதுநகர் - காரைக்குடி, காரைக்குடி- திருச்சி ரயில்களை ஒருங்கிணைத்து தூத்துக்குடி- திருச்சி இடையே இன்டர்சிட்டி ரயிலாக தினமும் இயக்க வேண்டும்.
தூத்துக்குடி - பாலக்காடு - தூத்துக்குடி பாலருவி விரைவு ரெயிலில் ஏசி பெட்டி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. எனவே, 2 பொது பெட்டிகளை குறைத்துவிட்டு ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டியையும், ஒரு இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டியையும் உடனடியாக இணைக்க வேண்டும். அனைத்து ரயில்களுக்கும் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும். திருச்செந்தூர் ரயில் நிலையத்தை பயணிகள் தேவைக்கு ஏற்ப மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு கனிமொழி எம்.பி கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications