நல்லா பாருங்க! இது மெரினா இல்ல... அடையாளம் தெரியாமல் அசத்தலாக மாறிய தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை
தூத்துக்குடி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட்டு இருக்கும் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பொதுமக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு தளாமாக உருவெடுத்து இருக்கிறது.
Recommended Video
தூத்துக்குடி என்றாலே துறைமுகமும், தொழிற்சாலைகளும், முத்துக்குளித்தலுமே நம் அனைவரது நினைவுக்கு வரும்.
இந்த மாவட்ட மக்கள் சுற்றுலா செல்வதாக இருந்தால் கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களையே நாடி இருக்க வேண்டிய நிலை இருந்தது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்
கடல்சார்ந்த பகுதியாக தூத்துக்குடி இருந்தாலும், அங்குள்ள கடற்கரைகள் முறையான பராமரிப்பின்றி காணப்பட்டதால் மக்களின் வருகையும் குறைவாகவே இருந்து வந்தது. இந்த சூழலில்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட அரசு அங்குள்ள முத்துநகர் கடற்கரையை அழகுபடுத்தும் பணியை தொடங்கியது.

ரூ.4.4 கோடி மதிப்பில் திட்டம்
அதன் அடிப்படையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ.4.4 கோடி மதிப்பீட்டில் திட்டம் தீட்டப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்கட்டமாக தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் படிந்திருந்த பாசிகள், கடற்கரையை மாசுபடுத்தி இருந்த கடற்கரை கழிவுகள் போன்றவை அகற்றப்பட்டு கடற்கரை மணல் பரப்பு தூய்மைப்படுத்தப்பட்டது. மெரினா கடற்கரைபோல சுற்றுலா பயணிகள் அமர்வதற்கு நிழற்குடையுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டன.

செல்பி ஸ்பாட்
மேலும் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக செயற்கை நீர்வீழ்ச்சி, கேலரி போன்ற இருக்கை அமைப்புகள் அமைக்கப்பட்டன. அழகிய முத்துபோன்ற சிலை, செல்பி பிரியர்களை கவர்வதற்காக சென்னை மெரினா கடற்கரையில் உள்ளதை போல் I LOVE TUTY என்ற எழுத்து கொண்ட செல்பி ஸ்பாட், கண்களை கவரும் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

சிறுவர் பூங்கா
சிறுவர்களை கவர்வதற்கான பச்சை புல்தரையுடன் கூடிய விளையாட்டு பூங்காவில் சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் போன்ற பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. நடைபயிற்சி செய்ய வரும் மக்களின் வசதிக்காக ஜிக் ஜாக் வடிவில் நடைபயிற்சி மேடைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இசை, கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக திறந்தவெளி மேடை ஒன்றும் உள்ளது.

கழிவறை மற்றும் பார்க்கிங் வசதி
ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு என தனித்தனி பார்க்கிங் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இரவு நேரங்களிலும் சுற்றுலா பயணிகள் வருவதற்காக அமைக்கப்பட்ட எல்.இ.டி. விளக்குகள் கடற்கரை முழுவதும் ஜொலிக்கின்றன.

நீர் விளையாட்டுகள்
அனைத்துக்கும் மேலாக முத்துநகர் கடற்கரையில் கடல் சாகச விளையாட்டுக்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. ஜெட் ஸ்கை, விண்ட் சர்ஃபிங், பனானா ரெய்டு, டாப் ரெய்டு உள்ளிட்ட விளையாட்டுகளும் இந்த சாகச விளையாட்டில் அறிமுகம் செய்யப்பட்டன. இது அங்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கிய அம்சமாக திகழ்ந்து வருகிறது.

பயண தூரம்
தூத்துக்குடி நகரிலிருந்து வெறும் 5 கிலோ மீட்டர் தொலைவிலும், தூத்துக்குடி ரயில்நிலையத்திலிருந்து வெறும் 6 கிலோ மீட்டர் தூரத்திலும் இந்த முத்துநகர் கடற்கரை அமைந்துள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்திற்கும் இந்த கடற்கரைக்கும் இடைப்பட்ட தூரம் 19 கிலோ மீட்டர்கள் மட்டுமே. Pearl beach என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த கடற்கரை தற்போது ஏற்படுத்தப்பட்ட வசதிகளால் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட சுற்றுலா விரும்பிகளின் ஹாட் ஸ்பாட்டாக உருவெடுத்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications