பூர்வீக சொத்து விவகாரம்.. தூத்துக்குடியில் புகார் தந்தவருக்கு போலீஸ் ட்விஸ்ட்.. நாள் தான் ஹைலைட்
தூத்துக்குடி: பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரை 28 நாட்கள் தான் இருக்கும், ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பிப்ரவரி 29ம் தேதி வரும். கடந்த ஆண்டு லீப் ஆண்டு என்பதால் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வந்தது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் தான் உள்ளது. நிலத்தகராறு புகாரை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட போலீசார், பிப்ரவரி 29-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மேலப்பாளையம் நேதாஜி தெருவை சேர்ந்த லிங்கத்துரை என்பவருடைய மகன் வசந்த். இவரது பூர்வீக வீடு, தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சாலைப்புதூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த பூர்வீக வீடு மற்றும் நிலம் தொடர்பாக வசந்துக்கும், அவருடைய உறவினரான செல்வராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து தூத்துகுடி தட்டார்மடம் காவல் நிலையத்தில் வசந்த் புகார் மனு அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தட்டார்மடம் போலீசார் வசந்துக்கு சம்மன் அனுப்பினர். அதில், "தாங்கள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்துவதற்காக தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் 29-2-2025 அன்று காலை 10 மணிக்கு ஆஜராக அறிவுறுத்தப்படுகிறீர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு 28 நாட்களே இருந்தது. ஆனால் பிப்ரவரி 29-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் போலீசார் தவறுதலாக சம்மன் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி எட்டயபுரத்தில் கள்ளநோட்டு புழக்கம்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சனிக்கிழமை அன்று சந்தையாகும். அதன்படி நேற்று அதிகாலை 4 மணியளவில் ஆட்டுச்சந்தைக்கு வியாபாரிகள், விவசாயிகள் வந்துள்ளார்கள். அப்போது, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த விவசாயியான பொன்வேலன் என்பவரிடம் ஒரு கும்பல் வந்து 2 வெள்ளாடுகளை வாங்கியுள்ளது. அவர் சொன்ன விலைக்கு எந்தவித பேரமும் பேசாமல் ரூ.19 ஆயிரத்தை கொடுத்து, ஆடுகளை வாங்கியிருக்கிறார்கள். ரூ.13 ஆயிரத்திற்கு விற்கும் ஆடுகளை ரூ.19 ஆயிரத்துக்கு வாங்கியுள்ளார்கள்.. அவர்கள் கொடுத்த 500 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் புத்தம் புதிதாகவும், லேசாகவும் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பொன்வேலன் எட்டயபுரம் போலீசுக்கு உடனே தகவல் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த பணத்தை வாங்கி பார்த்த போது அனைத்தும் கள்ள ரூபாய் நோட்டு என்பது தெரியவந்தது. அங்கு விருதுநகர் மாவட்டம் கோட்டைபட்டியைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 35) என்பவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த கும்பல் சாத்தூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து போலீசார், சாத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளத்தை சேர்ந்த முனியன் (48), கோட்டைபட்டியைச் சேர்ந்த சந்திரன் (27), காளிமுத்து (30), அழகர்சாமி (45), சாத்தூர் சூரங்குடியைச் சேர்ந்த சுப்புராஜ் (51) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.54 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கு மும்பையைச் சேர்ந்த ஒருவர் மூலம் மதுரையில் கள்ளநோட்டுகளை வாங்கி இருப்பதும், அவற்றை தமிழகம் முழுவதும் உள்ள ஆடு, மாட்டு சந்தைகளில் புழக்கத்தில் விட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications