எங்க திமுக மோர் பந்தலை அகற்றுயா பார்க்கலாம்.. தவெக பந்தலை அகற்றிய ஊழியரிடம் விஜய் கட்சியினர் சவால்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அனுமதியின்றி அமைத்ததாக கூறி தவெகவின் தண்ணீர் பந்தலை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதற்கு தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஊழியர்களை அருகே இருந்த திமுகவின் நீர், மோர் பந்தலுக்கு அழைத்து சென்று ‛‛இப்போது எடுயா பார்க்கலாம்'' என்று கடும் வாக்குவாதம் செய்து மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், அரசியல் கட்சியினர் நீர், மோர் பந்தலை அமைத்துள்ளனர்.

தமிழகத்தில் திமுக, அதிமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் நீர், மோர் பந்தல் அமைத்து மக்களின் தாகத்தை தணித்து வருகின்றனர்.
அந்த வகையில் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் அருகே நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. பந்தலின் உள்ளே மண்பாணையில் தண்ணீர் வைக்கப்பட்டு இருந்தது. பொதுவாக நீர், மோர் பந்தல் அமைக்கும்போது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற வேண்டும்.
ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தினர் அனுமதி வாங்காமல் தண்ணீர் பந்தல் அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இன்று தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீர் பந்தலை அகற்றினர். தகவல் அறிந்ததும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா தலைமையில் கட்சியினர் அங்கு குவிந்தனர். மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
எங்களின் தண்ணீர் பந்தலை எப்படி அகற்றலாம்? என்று கேள்வி கேட்டனர். அதற்கு மாநகராட்சி ஊழியர்கள், அனுமதி பெற்று தான் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என்று கூறி அகற்றினர். தவெகவின் அமைத்திருந்த தண்ணீர் பந்தல் அருகே திமுக சார்பிலும் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அதனை ஏன் அகற்றவில்லை? என்று கேள்வி எழுப்பினர். அதுமட்டுமின்றி மாநகராட்சி ஊழியரை இழுத்து சென்று திமுகவினர் நீர், மோர் பந்தல் அருகே நிற்க வைத்து எடுயா இப்போது.. அகற்றுயா இப்போது என்று அதட்டினர்.
அதோடு மாநகராட்சி ஊழியர்களுக்கு எதிராக தவெகவினர் அண்ணா பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் வந்து அவர்களை சமாதானம் செய்தனர். அப்போது போலீசாருக்கும், தவெகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக தவெகவினர் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications