ஓவர் ஸ்மார்ட் அதிமுக எம்.எல்.ஏ... ஆட்சியருக்கு போட்டியாக மனு... தூத்துக்குடி பஞ்சாயத்து
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு அலுவலர் அறையில் அமர்ந்துகொண்டு அதிமுக எம்.எல்.ஏ.மனு வாங்கிய விவகாரம் முதலமைச்சர் வரை பஞ்சாயத்திற்கு சென்றுள்ளது.
விளாத்திக்குளம் எம்.எல்.ஏ.சின்னப்பன் செய்த காரியத்தால் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி டென்ஷனாகி இதனை இ.பி.எஸ்.வரை கொண்டு சென்றுள்ளார்.
எம்.எல்.ஏ.சின்னப்பன் அண்மையில் மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனடி தீர்வு
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வாரம்தோறும் திங்கள்கிழமையன்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதிகாரிகள் முன்னிலையில் மனுவை வாங்கும் ஆட்சியர்கள் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு அளிப்பார்கள்.

ஓவர் ஸ்மார்ட்
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று சென்ற விளாத்திக்குளம் அதிமுக எம்.எல்.ஏ. சின்னப்பன், கலெக்டர் மட்டும் தான் மனு வாங்க வேண்டுமா..நான் வாங்கக் கூடாதா எனக் கேட்டு மக்கள் தொடர்பு அலுவலர் அறையில் அமர்ந்துகொண்டார். பின்னர் விளாத்திக்குளம் தொகுதியில் இருந்து வந்திருந்தவர்களை அந்த அறைக்கு அழைத்து மனு வாங்கினார்.

விதிமீறல்
ஒரு எம்.எல்.ஏ. தனது தொகுதியில் முகாம் நடத்தி மனுக்களை வாங்க வேண்டுமே தவிர, ஆட்சியர் அலுவலகத்தில் வந்து அமர்ந்துகொண்டு போட்டிபோடக்கூடாது என மாவட்ட ஆட்சியரகம் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சின்னப்பன் நடவடிக்கையால் கலெக்டர் மிகுந்த கோபம் அடைந்ததாகவும் கூறுகின்றனர்.

வலியுறுத்தல்
அதிமுக எம்.எல்.ஏ.சின்னப்பனின் ஓவர் ஸ்மார்ட் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது தவறு என்றும், நாங்களும் இனி ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று அமர்ந்துகொண்டு மனு வாங்க வேண்டியது வரும் எனவும் திமுக எம்.எல்.ஏ.க்களான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதா ஜீவன் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications