சாலையோரம் நின்றிருந்த மாற்றுத்திறனாளி.. உடனே காரை நிறுத்த சொன்ன முதல்வர் ஸ்டாலின்.. நெகிழ்ச்சி
சாலையோரம் நின்றிருந்த மாற்றுத்திறனாளியை கண்ட உடன் காரை நிறுத்திய முதல்வர் ஸ்டாலின், அவரது மனுவை பெற்றுச்சென்றார்.
தூத்துக்குடி: சாலையோரம் நின்றிருந்த மாற்றுத்திறனாளியை கண்ட உடன் உடனே காரை நிறுத்திய முதல்வர் ஸ்டாலின், அவரது மனுவை பெற்றுச்சென்றார்.
நாகர்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு தூத்துக்குடி விமான நிலையத்துக்கு முதல்வர் ஸ்டாலின் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாலையோரம் குடும்பத்தினருடன் நின்று கொண்டிருந்த மாற்றுத் திறனாளியைக் கண்டு முதல்வர் ஸ்டாலின் உடனே காரை நிறுத்தினார். அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றுச் சென்றார் முதல்வர்.

என்ன கோரிக்கை
5 ஆண்டுகளுக்கு முன்பு, தூத்துக்குடி சந்தையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மூட்டை விழுந்ததில் கழுத்து முறிவு ஏற்பட்டு மாற்றுத் திறனாளியாகி விட்ட செல்வகுமார், 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள தனது மனைவிக்கு ஏதாவது வேலை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

திராவிட மாடல்
முன்னதாக நாகர்கோவிலில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "இன்றைக்கு நாட்டைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு உலவிக் கொண்டிருக்கும் சிலர், இந்த ஆட்சி இப்படி செயல்பட்டு கொண்டிருக்கிறதே, 'திராவிட மாடல்' என்று சொல்லி தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்தில் ஒரு கவர்ச்சிகரமான - மக்களை கவரும் வகையில் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்களே, எனவே தொடர்ந்து இந்த ஆட்சியை விட்டால் நம்முடைய பிழைப்பு என்னாவது? என்ற நிலையில் நம்மீது புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

திட்டமிட்டு காரியம்
இந்த ஆட்சிக்கு எப்படியாவது கெடுதல் செய்து, இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை எல்லாம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். எங்காவது கலவரத்தை ஏற்படுத்தலாமா? ஜாதிக் கலவரத்தை தூண்டலாமா? மதக் கலவரத்தை ஏற்படுத்தலாமா? ஆங்காங்கே இருக்கும் மக்களிடத்தில் பிளவுகளை ஏற்படுத்தலாமா? என்றெல்லாம் திட்டமிட்டு அந்தக் காரியத்தில் இன்றைக்கு அவர்கள் எல்லாம் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பதில் எப்படி
என்னை பொறுத்தவரையில் நம்மீது சொல்லப்படும் தேவையற்ற விமர்சனங்களுக்கு எல்லாம் நான் அதிகம் பதில் சொல்வதில்லை. ஏனென்றால் அதைச் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதன் மூலமாகத் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் அந்தப் பிரச்சாரத்தை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். யார் யாரெல்லாம் அதற்கு பதில் சொல்ல வேண்டுமோ, அவர்களை வைத்து நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications