டிபன் சாப்பிட்டு வீட்டு வாசலுக்கு வந்த சுகுமார்! பாதாள சாக்கடை பள்ளத்தில் கண்ட காட்சி! வெலவெல வேலூர்
வேலூர்: வேலூரில் வீட்டின் வெளியே பாதாளச் சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 5 அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை, பாம்பு பிடிக்கும் தன்னார்வலர்கள் பிடித்து காட்டுப் பகுதியில் விட்டுவிட்டனர். எனினும் இந்த விவகாரத்தில் தீயணைப்புத் துறையினர் அலட்சியம் காட்டுவதாகவே அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வேலூர் பூந்தோட்டப் பகுதியில் உள்ள சேவை முனுசாமி ராஜம்மாள் வீதியை சேர்ந்தவர் சுகுமார். இவரது வீட்டு வாசலில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவர் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே வந்த போது பாம்பு ஒன்று பள்ளத்தில் புகுந்ததை பார்த்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுகுமார், வேலூர் தீயணைப்புத் துறைக்கு நேரில் போய் புகார் அளித்துள்ளார். அப்போது தீயணைப்புத் துறையினர் வீட்டிற்கு வெளிப்பகுதியில் இருக்கும் பாம்பை பிடிப்பதற்கு வர முடியாது என கூறி பாம்பு பிடிக்கும் நபரின் தொலைபேசி எண்ணை வழங்கியதாக தெரிகிறது.
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த சுகுமார், அந்த தீயணைப்புத் துறையினர் கொடுத்த எண்ணுக்கு போன் செய்துள்ளார். அப்போது சம்பவ இடத்திற்கு அந்த நபரும் வந்துவிட்டார். பிறகு பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து அதிக விஷம் கொண்ட 5 அடி கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தார்.
இதையடுத்து அந்த பாம்பை காட்டு பகுதியில் விட்டுவிட்டார். இந்த பாம்பு புகுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கண்ணாடி விரியன் பாம்புகள் இந்தியாவில் அதிகம் காணப்படுகின்றன. இந்த பாம்பு அதிக விஷம் கொண்டதாகும். இந்த பாம்புக்கு எட்டடி விரியன் என்ற பெயரும் உண்டு.
அதாவது இந்த பாம்பு கடித்ததும் எட்டடி எடுத்து வைப்பதற்குள் கடிபட்டவர் இறந்துவிடுவார் என்பதால் அந்த பெயர் இந்த பாம்புக்கு உள்ளது. பாம்பு கடித்த இடத்திலிருந்து அதிகபடியான ரத்தம் வெளியேறும். ரத்த விரியன், கழுதை விரியன் வகை பாம்புகளும் உள்ளன. இதன் கழுத்து முக்கோண வடிவில் இருக்கும். இது பழுப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
இது கடித்த 6 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழக்க நேரிடும். இந்த பாம்பால் ரத்தம் உறையவும் செய்யும், ரத்தம் வழியவும் செய்யும். இதனால்தான் பாம்பு கடித்தவர்களை மருத்துவமனைகளில் சேர்த்தால் அவர்களை ஒரு மணி நேரத்திற்கொரு முறை சோதிப்பர்.












Click it and Unblock the Notifications