பான் கார்டை திறந்து பார்த்ததுமே.. வியர்த்து போன வேலூர் இளைஞர்.. 3.5 கோடிக்கு வந்த நோட்டீஸ்
வேலூர்: வேலை தேடி வரும் வேலூர் இளைஞருக்கு 2023-2024-ம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன்ஸ் தாக்கல் செய்யும்படி எஸ்எம்எஸ் வந்துள்ளது.அத்துடன் ரூ.3.5 கோடி ஜி.எஸ்.டி. கட்ட வேண்டும் நோட்டீஸ் வந்துள்ளது. இதனால் இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்த இளைஞர் புகார் மனு அளித்தார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ஜூலை 1ம் தேதியான நேற்று நடந்தது. கலெக்டர் சுப்புலெட்சுமியிடம் வேலூர், ஆர்.என்.பாளையம் கே.கே.நகரைச் சேர்ந்த முகமது நயிமுதீன் (வயது 29) என்பவர் மனு அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறுகையில், " என் பெயர் முகமது நயிமுதீன். வேலூர், ஆர்.என்.பாளையம் கே.கே.நகரில் வசிக்கிறேன். எனக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். நான் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு இப்போது வேலை தேடி வருகிறேன். கடந்த மார்ச் மாதம் எனது செல்போன் எண்ணுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில் வருமான வரித்துறை அதிகாரிகள், 2023-24 -ம்ஆண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்திட அறிவுறுத்தியிருந்தார்கள்.
இதையடுத்து என்னவென்று பார்க்க வேண்டும் என்று நினைத்த நான், எனது நண்பர் உதவியுடன் எனது பான் கணக்கை லாக்-இன் செய்து பார்த்தேன். அதில் எனது பான் கார்டு எண்ணை கொண்டு என்.எம்.என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம், 5/135 சேரன் காலனி ரோடு, துடியலூர், கோவை - 641034 எனும் முகவரியில் இயங்கி வருவதை கண்டேன்.
அதற்கான எனது பெயரில் கோவை மாநகராட்சி 2-வது மண்டலத்தில் இருந்து ஜி.எஸ்.டி எண் பெறப்பட்டுள்ளது. இதை பார்க்கும் போது எனது பெயரில் கோவையில் போலியாக நிறுவனம் நடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து, கோவையில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு சென்று பார்த்தபோது அங்கு அது போன்ற நிறுவனமே செயல்படவில்லை. பிறகு, வேலூரில் உள்ள ஜி.எஸ்.டி அதிகாரிகளை தொடர்புகொண்டு எனது பெயரிலான போலி ஜி.எஸ்.டி எண்ணை ரத்து செய்ய கோரினேன்.
அவர்கள் முறையாக காவல்துறையில் புகார் கொடுத்து, காவல் துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். எனவே, எனது பெயரில் போலி ஜி.எஸ்.டி பணபரிவர்த்தனை மேற்கொள்ளும் மோசடி நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார். இளைஞர் முகமது நயிமுதீன் வேலூர் கலெக்டரிடம் மட்டுமின்றி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் இந்த புகார் மனுவினை அளித்துள்ளார்.
இதனிடையே முகமது நயிமுதீன் பெயரில், என்.எம்.என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் கோவை துடியலூர் இருப்பதாக கணக்கு காண்பித்து கடந்த 2 ஆண்டுகளாக போலியாக நிறுவனம் நடத்தி ரூ.24 கோடி வரை டர்ன் ஓவர் செய்திருக்கிறது.. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 7 கோடி ரூபாய்க்கு வியாபாரம் பார்த்துள்ளதும் தெரியவந்துள்ளது. ஸ்கிராப்' மற்றும் ஆடை வியாபாரம் செய்த அந்த நிறுவனம் கிட்டத்தட்ட ரூ.3.50 கோடி ஜிஎஸ்டி கட்ட வேண்டியது இருந்தது. ஜிஎஸ்டி வரி ஏய்ப்புக்காக முகமது நயிமுதீன் பெயரில் நிறுவனத்தைநடத்திய கும்பல் குறித்து விசாரணை நடந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் இருந்து மட்டும் 60-க்கும் மேற்பட்ட ஜி.எஸ்.டி மோசடி புகார்கள் வந்துள்ளது. அப்பாவி மக்களை குறிவைத்து ஜிஎஸ்டி மோசடி நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications