ஆம்பூர் அருகே பயங்கரம்.. நாய்க்கு வைத்த கறிக்குழம்பை சாப்பிட்ட சிறுமி.. அலறி துடித்த பெற்றோர்
ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதகடுப்பு பகுதியில் ஒரு வீட்டில் நடந்த சின்னச் சின்ன அலட்சியம், 3 வயது மழலையின் உயிரையே பறித்துச் சென்றுவிட்டது.. அப்படி என்ன நடந்தது தெரியுமா?.. பெற்றோர் கொஞ்சமும் எதிர்பார்க்காத விதத்தில் நிகழ்ந்த இந்த சோகம், அந்த குடும்பத்தை மட்டுமல்ல, பகுதி மக்கள் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியிருக்கிறது.. என்ன காரணம், எப்படி நடந்தது என்ற தகவல்களை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சான்றோர் குப்பம், மாதகடுப்பு பகுதியில் நிகழ்ந்த இந்த கொடூரமான சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் நிலைகுலைய வைத்துள்ளது.

ஆம்பூர் கறிக்குழம்பு
இந்த பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார்.. இவருக்கு ஸ்ரேயா என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களது வீட்டில் சமைக்கப்பட்ட உணவு ஒரு பெரும் விபரீதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 10ம் தேதி ஸ்ரேயா தனது குடும்பத்தினருக்காக வீட்டில் கோழிக்கறி குழம்பு சமைத்துள்ளார்.. அந்த உணவை சாப்பிட்டு முடித்த பின்னர், மீதமிருந்த குழம்பை இரண்டு நாட்களாக வீட்டில் வைத்துள்ளனர்..
நாய்க்கு வைத்த உணவு
அதனைத் தொடர்ந்து, கடந்த மே 12-ஆம் தேதி ஸ்ரேயா, பாத்திரத்தில் மீதமிருந்த பழைய கோழிக்கறி குழம்பை வீணாக்காமல் தங்களது வீட்டில் வளர்க்கும் நாய்க்கு உணவாக ஊற்றி வைத்துள்ளார்.
கோடைக்காலம் என்பதால் அந்த உணவு கடுமையான நச்சுத்தன்மையாக மாறியிருந்ததை அந்த பெற்றோர் கவனிக்கத் தவறிவிட்டனர்.. இந்த நிலையில், வீட்டின் வெளிப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சதீஷின் 3 வயது பெண் குழந்தை பூமிகாவும், அவரது தங்கையான 1 வயதுடைய ரேணுகாவும் அங்கிருந்த அந்த பழைய உணவை விளையாட்டுத்தனமாக, பெற்றோருக்குத் தெரியாமல் எடுத்து சாப்பிட்டுள்ளனர்..
கறிக்குழம்பு சாப்பிட்ட பெண்
நச்சுத்தன்மை வாய்ந்த அந்த கோழிக்கறி குழம்பை சாப்பிட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே இரண்டு குழந்தைகளுக்கும் கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. குழந்தைகள் இருவரும் அடுத்தடுத்து மிக கொடூரமான முறையில் வாந்தி எடுத்து மயங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், அவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 3 வயது குழந்தை பூமிகாவிற்கு உடல் நிலைக்குறைவு மிக மோசமாக அதிகரித்தது..
கதறிய பெற்றோர்
இதனால் பதற்றமடைந்த மருத்துவர்கள், பூமிகாவை மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 3 தினங்களாக குழந்தை பூமிகாவிற்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.. எனினும், நச்சின் வீரியம் உடலுக்குள் அதிகமாக பரவியதால் சிகிச்சை பலனின்றி குழந்தை பூமிகா நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.
1 வயது குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. நாய்க்கு வைத்த பழைய கோழிக்கறி உணவை குழந்தைகள் சாப்பிட்டு, அதில் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் கடுமையான சோகத்தை உருவாக்கியுள்ளது..
சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் உணவை பாதுகாப்பாக வைப்பதும், பழைய உணவை குழந்தைகள் எட்டாத இடத்தில் மட்டுமே வைப்பதும் எத்தனை முக்கியம் என்பதை இந்த சம்பவம் ஒவ்வொரு பெற்றோருக்கும் நினைவுபடுத்துகிறது.. இனியாவது நாம் கவனமாக இருப்போமா?












Click it and Unblock the Notifications