அரசு ஊழியருக்கு மறக்கவே முடியாத பரிசு.. வேலூரில் தனியார் பள்ளி உரிமையாளர் தந்த சர்ப்ரைஸ்
வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியில் மாவட்ட கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்) இயங்கி வருகிறது. இங்கு அலுவலக கண்காணிப்பாளராக செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனியார் பள்ளியின் உரிமம் புதுப்பிக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவாகரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தார்கள்.
வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியில் மாவட்ட கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்) இயங்கி வருகிறது. இங்கு அலுவலக கண்காணிப்பாளராக 56 வயதாகும் செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வந்தார்.

தனியார் பள்ளிகளின் உரிமம் 3 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில், காட்பாடியை அடுத்த பரதராமி பகுதியைச் சேர்ந்த தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் உரிமத்தை புதுப்பிக்க அப்பள்ளி நிர்வாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணப்பித்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் வரை உரிமம் புதுப்பிக்கப்படாததால் அப்பள்ளியின் தாளாளர் தேவராஜ்லு மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு நேரில் வந்து கேட்டிருக்கிறார்,
அப்போது கண்காணிப்பாளர் செந்தில்குமார், உரிமத்தை புதுப்பிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத தேவராஜ்லு இதுகுறித்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மைதிலியிடம் புகார் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரையின் பேரில் தேவராஜ்லு ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரத்தை நேற்று மதியம் 12.30 மணிக்கு விருதம்பட்டு தனியார் மருத்துவமனை அருகே உள்ள இடத்தில் செந்தில்குமாரிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான போலீசார் பணத்துடன் செந்தில்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தார்கள். மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொதுவாக ஒரு கல்வி நிறுவனத்தின் உரிமத்தைப் புதுப்பிக்க தனியார் பள்ளிகள் 3 ஆண்டுக்கு ஒரு முறை இப்படி லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தால், அந்தப் பள்ளி நிர்வாகம் அந்தப் பணத்தை ஈடுகட்ட மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உயர்த்தவே முயற்சிக்கும் என்று கூறப்படுகிறது. இது மறைமுகமாக சாதாரணப் பெற்றோர்களின் பர்சைத்தான் பதம் பார்க்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கல்விக்கட்டணத்தை பள்ளிகள் உயர்த்துவதற்கு பின்னால் பல காரணம் இருந்தாலும், இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
பள்ளியின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்பது ஒரு நல்ல விதி என்றாலும். அந்தப் புதுப்பித்தல் நடைமுறையை ஆன்லைன் (Online) மூலம் வெளிப்படையாக மாற்றினால் மட்டுமே இதுபோன்ற லஞ்ச விவகாரங்களைத் தவிர்க்க முடியும்.
பள்ளிகள் விண்ணப்பித்தவுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (உதாரணமாக 30 நாட்கள்) உரிமம் வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால் அது தானாகவே புதுப்பிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும் .. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதற்காகவே உள்ள அத்தனை விதிகளை அரசு அடைக்க வேண்டும். அப்படி செய்தால் தான் லஞ்சம் குறையும்.












Click it and Unblock the Notifications