வேலூரில் பிறந்த நாள் விழாவில் பிரியாணி.. உற்சாகமாக சாப்பிட்ட பாத்திமா.. என்ன நடந்தது?
வேலூர்: வேலூர் சைதாப்பேட்டை கசாயகார தெருவைச் சேர்ந்த ஷெரிப் என்பவரின் மனைவி பாத்திமா கடந்த 25ம் தேதி பிரியாணி சாப்பிட்டார். ஆனால் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது யாருமே எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது . பாத்திமாவின் வீட்டின் அருகே உள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவரின் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை பிரியாணி மீதான மோகம் அதிகரித்துள்ளது. ஒரு தட்டில் சோறு, கறி, முட்டை, தயிர் பச்சடி என அனைத்தும் கிடைப்பதால் இது ஒரு முழுமையான திருப்தி சாப்பிடுபவர்களுக்கு கிடைக்கிறது. இன்று பிறந்தநாள் முதல் கல்யாணம் வரை எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும் பிரியாணி பிரதான உணவாகிவிட்டது. சென்னையில் எந்த விழா என்றாலும் பிரியாணி விருந்து நடக்கிறது. வடமாவட்டங்களிலும் பிரியாணி விருந்து தான் அதிகம் நடக்கிறது. வேலூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

வேலூர் சைதாப்பேட்டை கசாயகார தெருவைச் சேர்ந்த 42 வயதாகும் ஷெரிப் என்பவர் கூலித் தொழிலாளி ஆவார். இவரது மனைவி பாத்திமாவுக்கு 29 வயது ஆகிறது. இவர் கடந்த 25-ந் தேதி இரவு பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார்.
சுயநினைவின்றி கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றுள்ளார்கள். அங்கு அவரைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து வேலூர் வடக்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீஸார் அங்கு சென்று பாத்திமாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது குறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து வேலூர் வடக்கு போலீஸார் நடத்திய விசாரணையில், பாத்திமாவின் வீட்டின் அருகே உள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவரின் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்திருக்கிறது. அவர்கள் பாத்திமாவுக்கு பிரியாணி வழங்கியதாக தெரிகிறது. அந்த பிரியாணியைச் சாப்பிட்டபோது, திடீரென உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. எனினும் பாத்திமா பிரியாணி சாப்பிட்டதில் உயிரிழந்தாரா? அல்லது உடல்நலக்குறைவு காரணமாக உயிர் இழந்தாரா? என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகுதான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். வேலூரில் பிரியாணி சாப்பிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரியாணியில் பயன்படுத்தப்படும் கோழிக்கறி பழையதாக இருந்தால், அதில் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் உருவாகும். இது கடும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். அதேபோல் அளவுக்கு அதிகமான அஜினோமோட்டோ மற்றும் செயற்கை நிறமூட்டிகள் பிரியாணியில் இருந்தால் இதயத் துடிப்பு அதிகரிப்பு அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
அதேபோல் பிரியாணியை அவசரமாகச் சாப்பிடும்போது அல்லது பெரிய எலும்புத் துண்டுகள் தொண்டையில் சிக்கிக்கொள்ளும்போது 'சோக்கிங்' ஏற்பட்டு ஆக்சிஜன் தடைபட்டு உடனடி மரணம் நிகழ வாய்ப்புண்டு. அப்படித்தான் பாத்திமாவிற்கு நடந்ததா அல்லது உணவு விஷமானதா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும்.












Click it and Unblock the Notifications