அண்ணாமலை பெரும்பாலும் என்னை பற்றி பேச மாட்டார்.. அதனால்.. துரைமுருகன் கொடுத்த ரியாக்ஷன்
வேலூர்: பெரியார் குறித்து அவதூறாக பேசுபவர்களின் பிறப்பையே சந்தேகப்படுகின்றேன் என்று அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு, பக்கம் 21க்கு நான் பிறக்கவில்லை. 1962 ஆம் ஆண்டு முரசொலி பத்திரிகையை படிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் கூறியிருந்தார். இந்த நிலையில் அண்ணாமலை பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சீமானுக்கு எதிராக திமுகவினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இத்தகைய சூழலில் சீமான் பேசிய கருத்தில் தவறில்லை என்றும், அவர் சொன்னதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது என்றும் அண்ணாமலை கூறினார்.

இந்த நிலையில் அண்ணாமலை சீமானுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியது குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறிய துரைமுருகன், பெரியார் குறித்து அவதூறாக பேசுபவர்களின் பிறப்பையே சந்தேகப்படுகிறேன் என்று கூறினார். துரைமுருகன் பேசியது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது பேசிய அண்ணாமலை, நான் பெரியாரை பற்றி தான் பேசுகிறேன்.. என் பிறப்பில், ஒரு அப்பா அம்மாவுக்கு தான் நான் பிறந்தேன். விவசாயம் செய்யுற அம்மா அப்பாவுக்கு தான் பிறந்தேன். கிராமத்தில் தான் பிறந்தேன். அதிலும் எந்த சந்தேகமும் இல்லை. இதுவரைக்கு ஊழல் எதுவும் பண்ணதில்லை.. அதிலும் சந்தேகம் இல்லை. என் வீட்டுக்கு அமலாக்கத்துறை கடப்பாறையை எடுத்துக்கொண்டு வந்து சோதனை செய்யவில்லை. அதிலும் எந்த சந்தேகமும் இல்லை.
நீங்க ரெய்டுக்கு வரும் போது பையன் வந்து துபாயில் போய் இருக்கின்ற மாதிரி ஒரு பையனை நான் பெற்கவில்லை. இதிலும் எந்த சந்தேகமும் இல்லை. இதையெல்லாம் தாண்டி பக்கம் 21க்கு நான் பிறக்கவில்லை. அண்ணன் துரைமுருகன் பெரியாரை பற்றி பேசுபவர்களின் பிறப்பை சந்தேகப்படுகிறார் என்றால், நான் சொல்லியிருப்பதை போட்டு பார்த்துக்கொள்ளட்டும். எங்கள் பிறப்பு நல்ல பிறப்பு தான். ஆனால் பெரியார் சில மனிதர்களை பற்றி சொல்லியிருக்கிறார்.
அவர் சொன்னதை 1962 ஆம் ஆண்டு முரசொலியில் பப்ளிஷ் செய்யப்பட்டிருக்கிறது. எனவே துரைமுருகன் 1962 ஆம் ஆண்டு வெளியான முரசொலியை வாங்கி பார்க்க வேண்டும். துரைமுருகன் ஓய்வு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில் அண்ணாமலை பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் தெரிவித்துள்ளார். வேலூரில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அண்ணாமலை பேசியது குறித்து கேட்கப்பட்டது.
அப்போது அவர் கூறியதாவது:- அண்ணாமலையின் நல்ல எண்ணத்திற்கு நன்றி. பெரும்பாலும் அண்ணாமலை என்னை பற்றி பேசமாட்டார். அதனால் அவரை பற்றி பேச வேண்டாம். தமிழக ஆளுநர் அரசியல்வாதி போல் செயல்படுவதை முதலில் நிறுத்த வேண்டும். அவர் தமிழக அரசுடன் முச்சந்தியில் சண்டை போடுவது போல போடுகிறார். ஆளுநர் பதவிக்கான மரியாதை, மாண்பை மறந்து சண்டை போடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications