இந்து முன்னணி கொடியுடன் திமுக நிர்வாகி.. ‘காவித்துண்டு’ ஷாக் ஆன தொண்டர்கள்- தலைமைக்கு பறந்த ‘போட்டோ’
திருப்பத்தூர் : திமுக நிர்வாகி ஒருவர், இந்து முன்னணி கட்சியின் கொடியை அசைத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுளது.
விநாயகர் சதுர்த்திக்கு முதல்வர் ஸ்டாலின் ஏன் வாழ்த்துச் சொல்லவில்லை என பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், வாணியம்பாடி திமுக நகர செயலாளர், இந்து முன்னணி கொடியை அசைத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தது திமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் புகைப்படத்தை அவர் ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டுள்ள நிலையில், அதனை லோக்கல் திமுகவினர் தலைமை வரை அனுப்பிவிட்டதால் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

நெருக்கடி தந்த பாஜக
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கடந்த வாரம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு அரசியல், சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். தமிழக முதலமைச்சர் என்ற முறையில் முக ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் நெருக்கடி கொடுத்து வந்தனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் அதற்கு செவிசாய்க்கவில்லை.

திமுக எம்பி மறைமுக எதிர்ப்பு
விநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதனை தருமபுரி திமுக எம்.பி. செந்தில் குமார் மறைமுகமாக விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்துசமய அறநிலையத்துறை என்பது, அம்மதம் சார்ந்த சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்பு மட்டும் தான். கடவுள் வழிபாடு செய்வதோ, அச்சமய விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதோ அந்த துறையின் பணி அல்ல" என்று கருணாநிதி கூறினார் எனத் தெரிவித்திருந்தார்.

அதிமுக எம்.எல்.ஏ - திமுக நகர செயலாளர்
இந்நிலையில் தான் திமுக நகர செயலாளர் ஒருவர், இந்து முன்னணி கொடியைப் பிடித்து விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இந்த ஊர்வலத்தை அதிமுக எம்.எல்.ஏ செந்தில்குமார், நகர கூட்டுறவு வங்கி தலைவரும், திமுக நகர செயலாளருமான வி.எஸ்.சாரதிகுமார் தொடங்கி வைத்தனர்.

இந்து முன்னணி கொடியைப் பிடித்து
வாணியம்பாடி திமுக நகர செயலாளரும், நகர் மன்ற உறுப்பினருமான சாரதி குமார், இந்து முன்னணி ஏற்பாடு செய்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்று, இந்து முன்னணி அமைப்பின் கொடியை அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தது லோக்கல் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகைப்படங்களை அவர் ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டுள்ளார்.

தலைமைக்கு பறந்த புகார்
திமுக நகர செயலாளர் சாரதி குமார், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. கதிர் ஆனந்த்திடமும் இந்த பஞ்சாயத்து செல்ல, அவர் இதுகுறித்து சாரதி குமாரிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்களை சிலர் தலைமைக்கும் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், திருப்பத்தூர் மாவட்ட திமுகவில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications