என் மகன் தான் இந்த தொகுதிக்கு அடுத்த எம்.எல்.ஏ! திமுக பொதுக்கூட்டத்தில் அறிவித்த துரைமுருகன்!
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் தொகுதியின் அடுத்த எம்.எல்.ஏ. எனது மகன் தான் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கே.வி.குப்பம் தனித் தொகுதியாக உள்ள நிலையில், இன்னும் 4 ஆண்டுகளில் அந்தத் தொகுதி பொதுத்தொகுதியாக மாறும் என்பதையும் துரைமுருகன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த பூவை ஜெகன்மூர்த்தி தற்போது எம்.எல்.ஏ.வாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி பிறந்தநாள்
கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதிக்குட்பட்ட காங்குப்பம் கிராமத்தில் நடைபெற்றது. தனது சொந்த கிராமம் என்பதால் மிகவும் உற்சாகமாக மைக் பிடித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டெல்லிக்கே ராஜாவாக திகழ்ந்தாலும் கே.வி.குப்பம் தொகுதி மக்களுக்கு நம்ம துரைமுருகன் தான் என தன்னைப்பற்றி உரிமையும் உறவும் கொண்டாடினார். தாம் பிறந்த மண், ஓடியாடி விளையாடிய மண் என்பதால் கே.வி.குப்பம் மக்கள் மட்டும் தன்னை உரிமையுடன் துரைமுருகன் அழைக்கலாம் எனப் பேசிய அவர் அடுத்த தேர்தலில் இந்த தொகுதிக்கு என் மகன் கதிர் ஆனந்த் தான் எம்.எல்.ஏ. என போகிற போக்கில் மிகப்பெரிய விஷயத்தை கூறிச்சென்றார்.

நல்லா பேசுறாரு
கதிர் ஆனந்த் ரொம்ப நல்லா பேசுவதாகவும் தனக்கே போட்டியாக வந்துவிட்டாலும் வந்துவிடுவார் எனவும் நகைச்சுவை செய்த துரைமுருகன், கே.வி. குப்பம் மக்களின் நல்லது கெட்டது என அனைத்திலும் முன் நிற்க வேண்டும் என தனது மகன் கதிர் ஆனந்தை கேட்டுக்கொண்டார். உனக்காக இதை செய்கிறாயோ இல்லையே உன் அப்பாவான எனக்காக நான் பிறந்த மண்ணுக்காக இந்த தொகுதி மக்களுக்கு நீ உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இது தான் நீ எனக்கு செய்யும் மிகப்பெரிய தொண்டு என உருகினார்.

4 ஆண்டுகள்
அப்பாவின் கோரிக்கையை தலையசைத்து இருகரம் கூப்பி ஏற்றுக்கொண்ட கதிர் ஆனந்த், அப்பாவின் பேச்சுக் குறித்து யோசித்தபடி மேடையில் அமர்ந்திருந்தார். இதனிடையே பல ஆண்டுகளாக கீழ்வைத்தியனான்குப்பம் தனித் தொகுதியாக இருந்து வரும் சூழலில் தொகுதி மறுசீரமைப்பின் கீழ் அடுத்த தேர்தலில் பொதுத் தொகுதியாக மாறும் என்பதை இப்போதே சூசகமாக துரைமுருகன் தெரிவித்துள்ளார். துரைமுருகன் தனது மகன் தான் இந்த தொகுதிக்கு அடுத்த எம்.எல்.ஏ. என தேர்தலுக்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ள நிலையில் இப்போதே அப்படி கூற வேண்டிய அவசியம் என்ன வந்தது என வேலூர் மாவட்ட திமுகவில் விவாதம் நடந்து வருகிறது.

சொந்த கிராமம்
இதனிடையே இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கதிர் ஆனந்த் போட்டியிடமாட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த பூவை ஜெகன்மூர்த்தி தற்போது எம்.எல்.ஏ.வாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவுக்கு வாக்குவங்கி அதிகம் உள்ள தொகுதிகளில் கே.வி.குப்பமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கே.வி.குப்பம் தொகுதிக்குள் தான் துரைமுருகனின் பூர்விக கிராமமான காங்குப்பம் கிராமமும் வருகிறது.












Click it and Unblock the Notifications