வேலூர் மேயர் சுஜாதாவை ரவுண்டு கட்டிய திமுக கவுன்சிலர்! சொந்தக் கட்சியினரை சமாளிக்க முடியாத பரிதாபம்!
வேலூர்: வேலூர் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் சுஜாதா ஆனந்த்குமாரை திமுக கவுன்சிலர்கள் ரவுண்டு கட்டி கேள்விகள் கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத் தலைவர் புஷ்பலதாவுக்கும் மேயர் சுஜாதாவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அங்கிருந்த மற்ற திமுக கவுன்சிலர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
மேயராக பொறுப்பேற்று பல மாதங்களாகியும், இன்னும் சொந்தக் கட்சியினரை கூட சமாளிக்க முடியாமல் சுஜாதா திணறி வருவது குறிப்பிடத்தக்கது.

வேலூர் மாநகராட்சி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மாநகராட்சியில் திமுக அதிக வார்டுகளை கைப்பற்றியதால் சுஜாதா ஆனந்த்குமார் என்பவர் மேயராக தேர்வு செய்யப்பட்டார். ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவர் இவர் என்பது கூடுதல் தகவல். வேலூர் மாநகர மகளிரணி அமைப்பாளராக இருந்த இவர், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் ஆகியோரது சிபாரிசு மூலம் மேயராக அமர்ந்தார்.

துணை மேயர்
ஆரம்பம் முதலே சீனியர் திமுக கவுன்சிலர்களுக்கும் மேயர் சுஜாதாவுக்கும் இடையே ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. இதில் துணை மேயர் சுனில் குமாருடனும் டெண்டர் விவகாரத்தில் முட்டல் மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்நிலையில் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பேசிய ஒன்றாவது மண்டல தலைவர் புஷ்பலதா, என் கேள்விக்கு பதில் எங்கே, என்னை பேச விடுவீர்களா இல்லையா என ஆவேசம் காட்டினார். ஆனாலும் அசராத மேயர் சுஜாதா தனது பதிலை உரக்க கூறினார்.

கடும் எதிர்ப்பு
சொந்தக் கட்சியின் கவுன்சிலர்களே இப்படி கேள்விக்கணைகளால் தன்னை வறுத்தெடுப்பார்கள் என்பதை எதிர்பார்க்காத மேயர் சுஜாதா, அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதிலளிக்கத் தொடங்கினார். சொந்தக் கட்சிக்குள்ளேயே வேலூர் மேயர் சுஜாதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள விவகாரம் மண்ணின் மைந்தரான திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கவனத்துக்கும் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைதியாக வேடிக்கை
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத் தலைவர் புஷ்பலதாவுக்கும் மேயர் சுஜாதாவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அங்கிருந்த மற்ற திமுக கவுன்சிலர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தான் இதில் ஹைலைட்.












Click it and Unblock the Notifications