கோடிக்கணக்கில் சொத்து இருந்து என்ன பயன்? ஏ.சி.சண்முகத்திற்கு சொந்தமாக கார் கூட இல்லையாமே!
வேலூர்: வேலூரில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
வேலூர் லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்தும் பாஜக சார்பில் புதிய நீதி கட்சியின் ஏ.சி.சண்முகம், அதிமுக சார்பில் டாக்டர் பசுபதி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்றைய தினம் ஏ.சி.சண்முகமும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அப்போது ஏ.சி.சண்முகத்தின் சொத்து மதிப்பாக ரூ 152 கோடி பதிவு செய்துள்ளார்.
ஏ.சி.சண்முகத்தின் மனைவி பெயர் லலிதா லட்சுமி. ஏ.சி.சண்முகம் கையிருப்பு தொகையாக ரூ 55,601 ரூபாயும், லலிதா லட்சுமியிடம் ரூ 85 ஆயிரம் ரூபாயும் உள்ளது. வங்கிக் கணக்குகளில் ஏ.சி.சண்முகத்திற்கு ரூ 94. 64 லட்சமும் லலிதா லட்சுமிக்கு ரூ 1.17 கோடியும் உள்ளது. ஏ.சி.சண்முகத்திடம் 2,105 கிராம் தங்கம், 20 கிலோ வெள்ளியும் லலிதா லட்சுமியிடம் 3,837 கிராம் தங்கமும் ஒரு கிலோ வெள்ளியும் உள்ளது.
பல்வேறு வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகை, வைப்புத் தொகை, பங்கு முதலீடு, நகை என்று அசையும் சொத்துகளாக ஏ.சி.சண்முகத்திடம் ரூ 36 கோடியும் லலிதா லட்சுமியிடம் ரூ 37 கோடியும் உள்ளது. வேலூர், ஆரணி, பெங்களூர்,சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலங்கள், காலிமனைகள், கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என்று ஏ.சி.சண்முகம் பெயரில் அசையா சொத்து ரூ 7.43 கோடி மதிப்பிலும், லலிதா லட்சுமியின் பெயரில் ரூ 16.02 கோடியும் அசையா சொத்துகள் உள்ளன.
ஏ.சி.சண்முகத்திற்கு ரூ 17 கோடியே 72 லட்சமும் லலிதாவுக்கு ரூ 11 கோடியே 12 லட்சமும் கடன் உள்ளது. இவர் பெயரிலும் மனைவி பெயரிலும் கார்கள் ஏதும் சொந்தமாக இல்லையாம். ஏ.சி. சண்முகம் பெயரில் 8 அடுக்குமாடி குடியிருப்புகளும் அவருடைய மனைவி பெயரில் 2 அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது ஏ.சி.சண்முகம் தன் பெயரிலும் தன் மனைவி பெயரிலும் ரூ 127 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications