வேலூர் அருகே இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 3.6-ஆக பதிவு
வேலூர்: வேலூர் அருகே இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவுக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, நவம்பர் 29ஆம் தேதி 4 மணி 17 நிமிடங்கள் 22 வினாடிகள் என்ற மணி நேரத்தில், 25 கிலோமீட்டர் ஆழத்திற்கு வேலூரில் இருந்து 59 கிலோமீட்டர் மேற்குப்பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் இது 3.6 என்ற அளவுக்கு பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரிக்டர் அளவுகோலில் இந்த அளவுக்கு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது மிகவும் லேசான நிலநடுக்கம் என்று அறியப்படும். எனவே இதன் காரணமாக மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
ஒரு சில இடங்களில் மக்கள் லேசான நில அதிர்வை உணர்ந்ததாக தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழகத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.
இருப்பினும், இது போன்ற லேசான நில அதிர்வுகள் நடைபெறுவது இயல்புதான் என்றும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் இந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications