Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நள்ளிரவு 1.20 வரை.. தடதடத்த அமலாக்கத்துறை ரெய்டு.. அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனை நிறைவு

Subscribe to Oneindia Tamil

வேலூர்: அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நள்ளிரவில் நிறைவடைந்தது. வேலூர் காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகனின் வீடு உட்பட 4 இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை நள்ளிரவு 1.20 மணியளவில் முடிவடைந்தது.

திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு வேலூர் அருகே காட்பாடி காந்திநகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சிஆர்பிஎப் காவலர்கள் பாதுகாப்புடன் அமைச்சர் துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை சோதனையை தொடங்கினர்.

ed raid durai murugan vellore

துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் வீடுகளிலும் நேற்று காலை 7 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இருந்தார். எம்.பி கதிர் ஆனந்த் குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார். இதனால், அமைச்சர் துரைமுருகனின் வீட்டில் மட்டும் சோதனை தொடங்காத நிலையில் மற்ற இடங்களில் சோதனை நடைபெற்றது. இதனால், அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

இதுதொடர்பாக கதிர் ஆனந்த் தரப்பிலிருந்து இ-மெயில் அனுப்பினால் அதன் அடிப்படையில் சோதனை நடத்தப்படும் என திமுக நிர்வாகிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். காட்பாடி திமுக கிளை செயலாளர் வன்னியராஜா, வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், வழக்கறிஞர் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் சோதனை நடத்த கதிர்ஆனந்த் தரப்பிலிருந்து அமலாக்கத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, சோதனை தொடர்பான ஆவணங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கையெழுத்திட்டு வன்னியராஜா, சுனில்குமாரிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகளை திமுகவினர் சோதனை செய்த பிறகே வீட்டினுள் ரெய்டு நடத்த அனுமதித்தனர். சுமார் 7 மணி நேர காத்திருப்புக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் பிற்பகல் 2 மணியளவில் சோதனையைத் தொடங்கினர்.

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமைச்சரின் தனி அறை பூட்டியிருந்ததால் அந்த அறையின் பூட்டை உடைக்க, இரும்பு கடப்பாரை, சுத்தியல் போன்றவற்றை வீட்டினுள் கொண்டு சென்றனர். நள்ளிரவு வரை சோதனை நீடித்தது. நள்ளிரவு 1.20 மணியளவில் சோதனை நிறைவடைந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் கிளம்பிச் சென்றனர்.

முன்னதாக, இந்த ரெய்டு காரணமாக அமைச்சர் துரைமுருகன் வீட்டின் முன்பு திமுகவினர் ஏராளமானோர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சில முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+