எங்க பிரச்சனை இது தான்! முதலமைச்சரிடம் லிஸ்ட் போட்ட வேலூர்காரர்கள்! களைக்கட்டிய கள ஆய்வு!
வேலூரில் பல்வேறு தரப்பினருடன் முதலமைச்சர் கலந்துரையாடல்
வேலூர்: கள ஆய்வு செய்வதற்காக வேலூர் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினை பல்வேறு தரப்பினரும் சந்தித்து பேசி தங்கள் குறைகள், கோரிக்கைகள் பற்றி நேரடியாக எடுத்துக் கூறியுள்ளனர்.
கோரிக்கைகளில் எவையெல்லாம் சாத்தியமோ அவற்றையெல்லாம் உடனடியாக நிறைவேற்றி தருவதாக உறுதியளித்து அனுப்பி வைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தலைமைச் செயலாளர், தனது தனிச் செயலாளர்கள், உள்ளிட்டோரையும் இந்தச் சந்திப்பின் போது உடன் வைத்துக் கொண்டார் முதல்வர்.
சத்து கம்மி.. விலை அதிகம்! கோவை ஆவினில் நடப்பது என்ன? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பறந்த கடிதம்
முதல்வருடன் சந்திப்பு
"கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற புதிய திட்டத்தின் கீழ் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்வதற்காக வேலூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள், தோல்பொருள் உற்பத்தியாளர்கள், வணிகர் பிரதிநிதிகள், மொத்த வாணிப பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், சிறு தொழில் நிறுவன அதிபர்கள் ஆகியோரை தனித் தனியாக சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
விவசாயிகள்
இந்த கலந்துரையாடலின் போது, தென் பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்திடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாய சங்க பிரதிநிதிகள் முதலமைச்சரிடம் முன் வைத்தனர். தங்கள் மாவட்டத்தை சேர்ந்த துரைமுருகன் நீர்வளத்துறை அமைச்சராக இருப்பினும் கூட இந்தக் கோரிக்கையை அவர்கள் நேரடியாக முதல்வரிடம் வலியுறுத்திக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
தோல் பொருள் உற்பத்தியாளர்கள்
இதேபோல் தோல் பொருள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் பேர்ணாம்பட்டில் அனைத்து தோல் தொழிற்சாலைகளை இணைத்து செயல்பட்டு வரும் பொது தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் மானியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டன. இப்படி பல்வேறு தரப்பினர் முன் வைத்த கோரிக்கைகளை கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், அவற்றை பரிசீலித்து சாத்தியம் இருப்பதை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.
2 அமைச்சர்கள்
அமைச்சர்கள் துரைமுருகன், ராணிப்பேட்டை காந்தி ஆகியோர் முதல்வருடன் இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றதோடு மட்டுமல்லாமல், ஒரு சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உள்ள சில நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் முதல்வரிடம் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.