விவசாயி வண்டிகளுக்கு டோல்கேட் கட்டணம் வசூல்? வேலூரில் திமுக அரசை வெளுத்து வாங்கிய பாமக சௌமியா.. பலே
வேலூர்: விவசாய வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்று பாமகவின் சவுமியா அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.. கட்சி கொடி கட்டிய வாகனங்கள் இலவசமாகச் செல்லும் நிலையில், உழைக்கும் விவசாயிகளின் டிராக்டர்களுக்கு விலக்கு அளிக்காதது கண்டிக்கத்தக்கது என்றும் வேலூர் கூட்டத்தில் காட்டமாக கூறினார்.. சவுமியாவின் இந்த வீர்யம் மிக்க பேச்சுக்களை பாமகவினர் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்..
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கெங்கநல்லூர் பகுதியில், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பசுமைத் தாயகம் சார்பில் "சிங்கப்பெண்ணே எழுந்து வா" என்ற முழக்கத்துடன் தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணப் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது..

வேலூர் - சௌமியா அன்புமணி
இந்த நிகழ்வில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி அவர்கள் கலந்துகொண்டு, பெண்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் சமூக மாற்றத்தை உருவாக்கவும் அறைகூவல் விடுத்துச் சிறப்புரையாற்றினார்..
தனது உரையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளை சவுமியா அன்புமணி விரிவாக எடுத்துரைத்தார்.. குறிப்பாக, இன்று இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான உயிர்களைக் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம், டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்டது என்பதைப் பெருமிதத்துடன் நினைவுகூர்ந்தார்..
பாமகவின் தொலைநோக்கு திட்டம்
இது பாமக-வின் தொலைநோக்குப் பார்வைக்குச் சிறந்த சான்று என அவர் குறிப்பிட்டார்.. மேலும், அன்புமணி ராமதாஸ் அமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் நன்மைகள் குறித்தும், விவசாயம் என்பது உலகிற்கே உணவளிக்கும் உன்னதமான தொழில் என்பது குறித்தும் அவர் விளக்கமளித்தார்..
தற்போதைய திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய சௌமியா அன்புமணி, தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதாகக் குற்றம்சாட்டினார்..
ஆட்சியாளர்கள் ஆயிரம், மூவாயிரம் எனப் பணம் கொடுத்துப் பெண்களின் வாக்குகளை வாங்க முயற்சிப்பதாகவும், ஓட்டு வாங்கும் வரை மக்களிடம் கனிவாகப் பேசிவிட்டு, பிறகு ஆங்காங்கே டாஸ்மாக் கடைகளைத் திறந்து குழந்தைகளின் தலையெழுத்தையே மாற்றிவிடுவதாக வருத்தம் தெரிவித்தார்..
வேலூர் மாவட்டத்தில் மட்டும் டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு 1,350 கோடி ரூபாய் கைமாறுகிறது என்றும், யாரோ ஒருவரின் லாபத்திற்காக மக்களைப் பலியாக்குகிறார்கள் என்றும் அவர் விமர்சித்தார்..
விவசாய வாகனங்களுக்கு கட்டணம்?
விவசாயம் நிறைந்த அணைக்கட்டுப் பகுதியின் தேவைகள் குறித்துப் பேசிய சவுமியா அன்புமணி, வேலூர் மாவட்டத்தின் அடையாளமான முள்ளுக் கத்திரிக்காய் மற்றும் கொய்யா போன்ற வேளாண் விளைபொருட்களைப் பாதுகாக்கவும், அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் தேவையான குளிர்சாதனக் கிடங்கு வசதிகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தினார்..
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் விவசாய வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், கட்சி கொடி கட்டிய வாகனங்கள் இலவசமாகச் செல்லும் நிலையில், உழைக்கும் விவசாயிகளின் டிராக்டர்களுக்கு விலக்கு அளிக்காதது கண்டிக்கத்தக்கது... அனைத்துத் தேசிய நெடுஞ்சாலைகளிலும் வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்குச் சுங்கக் கட்டண விலக்கு அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்..
திமுக பெண்கள் ஓட்டுக்கு செக்?
சௌமியா அன்புமணியின் இந்த அதிரடிப் பேச்சு அனைத்துமே, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு திமுக அரசுக்கு எதிரான ஒரு நேரடிப் பிரச்சாரமாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது..
பெண்களின் உரிமைகள் மற்றும் குடும்பப் பாதுகாப்பு குறித்துப் பேசுவதன் மூலம், ஒட்டுமொத்தப் பெண் வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டி பாமக-வின் பக்கம் திருப்பும் முயற்சியாகவே இது கருதப்படுகிறது.. போதைக் கலாச்சாரம் மற்றும் டாஸ்மாக் விவகாரங்களை முன்வைத்து அவர் முன்வைத்த விமர்சனங்கள், ஆளும் தரப்புக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது..












Click it and Unblock the Notifications