அனுமதியின்றி டோக்கன்.. 4 பெண்கள் பலி.. வாணியம்பாடி ஜல்லி ஆலை உரிமையாளரை தூக்கிய போலீஸ்
இலவச சேலையை வாங்க குவிந்த பெண்களில் பெரும்பாலானோர் 50 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் என்பதால் விபத்திலிருந்து அவர்களால் தப்பிக்க முடியவில்லை.
திருப்பத்தூர்: வாணியம்பாடியில், நேற்று இலவச சேலை வழங்குவதற்காக டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் இதனை பெருவதற்காக அதிக அளவில் கூட்டம் கூடியதில் நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து டோக்கன் வழங்கிய ஜல்லி ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஜல்லி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையின் உரிமையாளரான ஐயப்பன் கடந்த 15 ஆண்டுகளாக தனது தந்தையின் நினைவு தினத்தையொட்டி இலவச சேலைகளை வழங்கி வந்திருக்கிறார். இவரது தந்தையின் நினைவு தினமும் தைபூசமும் ஒரே தேதியில் வரும். இந்நிலையில் இந்த ஆண்டும் இலவச சேலைக்கான டோக்கன்களை வாணியம்பாடி காய்கறி சந்தை அருகே உள்ள இடத்தில் நேற்று விநியோகித்துள்ளார்.
இலவச சேலைக்கான டோக்கன்களை பெற பொதுமக்கள் காலையிலிருந்தே வரிசையில் காத்திருக்க தொடங்கினர். சரியாக டோக்கன் கொடுக்கும் நேரத்தில், கூட்டம் அலைமோதியுள்ளது. இதனையடுத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆலை ஊழியர்கள் முயன்றுள்ளனர். ஆனால் கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகியதால் சில பெண்கள் மயக்கமடைந்துள்ளனர். இதனை கண்ட மற்றவர்கள் அவர்கள் மீது ஏறி சென்றிருக்கிறார்கள். பின்னர் டோக்கன் நிறுத்தப்பட்டுள்ளது.
வாணியம்பாடி சம்பவத்தால் வேதனை.. இதுபோன்ற நிகழ்ச்சிகளை அரசு தடை செய்ய வேண்டும் - அன்புமணி வேண்டுகோள்!
நிவாரணம்
இதனையடுத்து மயக்கமடைந்த 7 பெண்களை மீட்ட சக பெண்கள் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வள்ளியம்மாள், ராஜாத்தி, நாகம்மாள் மற்றும் மல்லிகா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தையடுத்து உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அத்துடன் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத்தையும் அறிவித்துள்ளார். மேலும், இதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 பெண்களுக்க தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த பெண்களின் உடல்கள் இன்று தகனம் செய்யப்படுகின்றன.
அஞ்சலி
இவர்களின் உடலுக்கு திருப்பத்தூர் மாவட்டம் திமுக மாவட்ட கழக செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தன்னுடைய தொகுதி நிதியிலிருந்து ரூ.25 ஆயிரத்தை உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளார். அதே போல படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்களையும் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விசாரணை
விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் சில நூறு பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும். இந்த முறையும் அதே எண்ணிக்கையில் டோக்கன்கள் விநியோக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இதனை பெறுவதற்கு சுமார் 2 ஆயிரம் பெண்கள் குவிந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் டோக்கன் பெற காத்திருந்த பெண்கள் அனைவரும் 50 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகளாவார்கள். எனவே விபத்திலிருந்து இவர்களால் எளிதாக தப்பிக்க முடியவில்லை. முதலில் 10லிருந்து 15 பெண்கள் வரை மயக்கமடைந்துள்ளனர்.
உயிரிழப்பு
சிலர் அவர்களை எழுப்ப முயற்சித்தாலும் பலர் அவர்களை கடந்து சென்று டோக்கன் வாங்குவதிலேயே குறியாக இருந்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்டவர்களை மீட்பது மேலும் சிரமமாகியுள்ளது. பின்னர் ஒரு வழியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா மற்றும் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடமும், பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த 4 பெண்களும் வாணியம்பாடியை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்களாவார்கள்.
இந்த சம்பவத்திற்கு அனுமதி பெறாமல் நிகழச்சியை நடத்திய ஜல்லி நிறுவன உரிமையாளர்தான் காரணம் என்று காவல்துறையினர் கூறிய நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமும் விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.