சுட்டெரிக்கும் கத்திரி வெயில்... அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வராதீங்க - வேலூர் மாவட்ட ஆட்சியர்
பகல் 11 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் என வேலூர் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
வேலூர்:பொதுமக்கள் வெயில் காலங்களில் அடிக்கடி தண்ணீர், நீர் மோர், இளநீர் உள்ளிட்ட நீர்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், வளர்ப்பு பிராணிகளை நிழல் பகுதிகளில் பராமரிக்குமாறும் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
வேலுாரா? வெயிலூரா என்றும் சொல்லும் அளவிற்கு அந்த மாவட்டத்தில் கடந்த 24ஆம் தேதி முதல் தொடர்ந்து 102 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.
மே 1ஆம் தேதி 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. நாளை முதல் கத்தரி வெயில் தொடங்க உள்ள நிலையில், இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், பகல் 11 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார். ஒருவேளை அவசியம் ஏற்பட்டால் குடிநீர், குடை, தொப்பி உள்ளிட்ட முன்னச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கி இருக்கிறார்.
பொதுமக்கள் வெயில் காலங்களில் அடிக்கடி தண்ணீர், நீர் மோர், இளநீர் உள்ளிட்ட நீர்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், வளர்ப்பு பிராணிகளை நிழல் பகுதிகளில் பராமரிக்க வேண்டும்.
மேலும், குறிப்பாக தினமும் மருந்துகளை எடுப்பவர்கள், இருதய நோய் உள்ளவர்கள் வெப்ப வாதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்கள் ஆவார்கள். இதன் அறிகுறிகள் அளவுக்கு அதிகமான வியர்வை அல்லது வியர்வை வராமல் இருப்பது, திடீர் மனநிலை மாற்றங்கள் இதய துடிப்பில் மாற்றங்கள் மயக்கம், தாகம், தலைவலி ஆகியவை அறிகுறிகளாக காணப்படும்.
இவ்வாறான நிலையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட இடைவேளைகளில் தண்ணீர், எலுமிச்சை சாறு, மோர் ஆகியவற்றை பருக வேண்டும். என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.