நான் ஒரு அமைச்சர்.. என் தொகுதியிலேயே ரோடு சரியில்ல.. துரைமுருகன் புகார்.. ஒரு ட்விஸ்ட் வச்சாரே!
வேலூர் : நான் ஒரு அமைச்சர். என் தொகுதியிலேயே சாலைகள் சரியில்லை, அதற்குக் காரணம் அதிமுக அரசுதான் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாநகராட்சி முழுவதும் எங்கு சென்றாலும் சாலைகள் புழுதி மாயமாகவும், குண்டும் குழியுமாக இருப்பதற்கு முழுக் காரணம் அதிமுக அரசுதான், அவர்களை எதிர்த்துத்தான் பாஜகவினர் கோஷம் போட்டிருக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அமைச்சர் துரைமுருகன், மின் கட்டணம், வரிகளை உயர்த்தாமல் எந்த அரசாங்கமும் நடக்காது எனத் தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின் தடை ஏற்பட்டது சர்ச்சைக்குள்ளான நிலையில், தனது தொகுதியிலேயே சாலைகள் சரியில்லை என்று பேசியுள்ளார் துரைமுருகன்.

அமைச்சர் துரைமுருகன்
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காசி குட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதி வண்டி மற்றும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா ஆகியவற்றை வழங்கினார். பின்னர் துரைமுருகன் பேசும்போது மின்சாரம் தடைபட்டதால் மைக் வேலை செய்யவில்லை. அமைச்சர் துரைமுருகன் விழாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்

ஆளுங்கட்சி திமிரில்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "வேலூரில் பாஜக கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு உள்ளது என்று கூறி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காவல்துறையினரின் தடுப்பை மீறி அலுவலகத்தில் நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்தியில் பாஜக ஆளுங்கட்சி என்ற திமிரில் இவர்கள் அத்துமீறி நடந்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

அத்துமீறல்
அதிமுக ஆட்சி காலத்தில் நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். ஆனால் அத்துமீறி நடந்ததில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் எதுவும் சரிவர நடைபெறவில்லை என்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவை அத்தனையும் அதிமுக ஆட்சி காலத்தில் விடப்பட்ட டெண்டர்கள். பல இடங்களில் அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் டெண்டர்கள் எடுத்துள்ளனர். அவர்கள் இன்னும் பணிகளை முடிக்கவல்லை.

அதிமுக தான் காரணம்
ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு காட்பாடி தொகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணி செய்ய கொடுத்தனர். ஆனால் அவர் திரும்பிக் கூட பார்க்கவில்லை. இதுவரை நடைபெற்ற குளறுபடிகளுக்கு வேலைகள் நடைபெறாமல் உள்ளதற்கு முழுக் காரணம் அதிமுக அரசுதான். அதிமுக அரசுடன் தான் பாஜகவினர் கூட்டு வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருக்கின்றனர். அதிமுகவை எதிர்த்து தான் இன்று பாஜகவினர் கோஷம் போட்டிருக்க வேண்டும்.

என் தொகுதியிலேயே பிரச்சனை
நான் ஒரு அமைச்சர். என் தொகுதியிலேயே சாலைகள் சரியில்லை. இதற்கு அதிமுக தான் காரணம். மாநகராட்சி முழுவதும் எந்த சாலைக்கு சென்றாலும் புழுதி மாயமாக உள்ளதற்கும் குண்டும் குழியுமாக இருப்பதற்கும் முழு காரணம் முந்தைய அதிமுக அரசுதான். அவர்களை எதிர்த்து தான் கோஷம் போட்டிருக்க வேண்டும்.

மின் கட்டண உயர்வு
சில நேரங்களில் மின் கட்டணம், வரிகளை உயர்த்தாமல் எந்த அரசும் நடக்காது. அதைத்தான் அமைச்சர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் மின் கட்டணத்தை பார்க்கும்போது தமிழ்நாட்டில் ஏற்றியுள்ள மின் கட்டணம் சொற்பமானதுதான்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications