8400 வீடுகளுக்குப் பட்டா..! குடிநீர் இணைப்பு இல்லாத வீடே இல்லை.. அட! ‘திராவிட மாடல்’ ஆச்சரியம்..
வேலூர்: கடந்த 30 ஆண்டுகளாகப் பட்டா இல்லாமல் தவித்த மக்களுக்கு 2 ஆண்டு ஆட்சியில் பட்டா வழங்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
"வேலூர் மாவட்டத்தில் மட்டும் இந்த 2 ஆண்டுகளில் 8400 வீடுகளுக்குப் பட்டா வழங்கி இருக்கிறோம். அதேபோல் குடிநீர் இணைப்புகள் இல்லாத வீடுகளே எங்கள் மாவட்டத்தில் இல்லை" என்கிறார் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்.

"இத்தனைக் காலமாக இந்தப் பகுதியில் வாழ்ந்துவருகிறோம். திடீரென்று யாராவது அதிகாரிகள் வந்து கூரையை எல்லாம் பிச்சுப் போட்டுவிட்டு, எங்களை உடனே காலி பண்ணுங்கள் என்றால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த நிலைமையில்தான் இதுவரை இருந்தோம். இன்று பட்டா கிடைத்துவிட்டது. ஏதோ கோடி ரூபாய்க்குச் சொத்து கிடைத்ததைப்போல ஒரு உணர்வு. இந்த இடம் 3 செண்டுதான். எங்களைப் பொறுத்தவரை இந்த இடம் 10 ஏக்கருக்குச் சமம். ஆகவே மனசுக்கு நிம்மதியாக இருக்கிறது" என்று கையெடுத்துக் கும்பிடுகிறார் இதே ஏரிகுத்தி வாசி லதா.
ஏரிகுத்தி கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார், "பட்டா இல்லாததால் இந்த 30 ஆண்டுகளாக மின்சார வசதிகூட இல்லாமல்தான் இந்தப் பகுதியில் உள்ள 50 குடும்பங்களும் வாழ்ந்துவந்தன. ஆண்கள் பெரும்பாலும் பீடித் தொழில் செய்கிறார்கள். பெண்கள் ஷூ கம்பெனிக்கு வேலைக்குப் போகிறார்கள். எல்லோரும் ஏழைக் கூலி மக்கள்தான்.

பட்டா இல்லாதவர்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவினருக்கு வீடும் இருக்காது, நிலமும் இருக்காது. இரண்டாவது பிரிவினருக்கு வீடும் மனையும் இருக்கும். ஆனால் பட்டா இருக்காது.
வீடு கட்டி பட்டா இல்லாமல் உள்ளவர்களுக்கு இப்போது பட்டா உடனடியாக வழங்கி இருக்கிறோம். இங்கே கிட்டத்தட்ட 120 மனைகள் உள்ளன. அதில் வீடு கட்டி இருப்பவர்கள் 50 பேர். அவர்கள் அனைவருக்கும் பட்டா வழங்கி விட்டோம். இங்குள்ள மனைப் பிரிவுகளை நத்தமாக மாற்றிவிட்டோம். ஆகவே அவர்களும் விரைவில் பட்டா பெற்றுக்கொள்ள முடியும்" என்கிறார்

"என் பெயர் காஞ்சனா. நான் கோட்டை காலனி கிராமம். முதலில் 2வது தெருவில் வசித்து வந்தேன். அந்த வீட்டுக்குப் பட்டா இல்லை. அதற்குப் பிறகு புதுமனை அரசு கொடுத்தது. மொத்தம் 3 செண்ட் கொடுத்தார்கள். இதற்கும் பட்டா இல்லாமல் இருந்தது.
அதன்பிறகு நாங்கள் கோரிக்கை வைத்தோம். அரசு அதிகாரிகள் எல்லோரும் வந்து ஆய்வு செய்துவிட்டு, பட்டா போட்டுக் கொடுத்தார்கள். இப்போது நிம்மதியாக இருக்கிறோம். அரசாங்கம் செய்த உதவிக்கு ரொம்ப நன்றி. இங்கு வந்த பிறகுதான் நன்றாக இருக்கிறோம்.

பட்டா இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியவில்லை. வீட்டுக்கு ஒரு லோன் வாங்க வேண்டும் என்றாலும் வேறு அரசு சார்ந்த உதவிக்கேட்டு விண்ணப்பித்தாலும் பட்டா கேட்கிறார்கள். பள்ளியில் பிள்ளைகளைப் படிக்கவைக்கக்கூடப் பட்டா ஆவணம் தேவைப்படுகிறது.
இந்தத் தெருவுக்குக் குடிநீர் வசதி செய்து கொடுத்துவிட்டார்கள். வீட்டுக்கு முன்பாகவே குழாய் போட்டுக் கொடுத்துள்ளார்கள். வீட்டுக்கு வீடு குழாய் போட்டதால் ரொம்ப தூரம் போய் தண்ணீர் சுமந்துவரும் கஷ்டம் இல்லாமல் போய்விட்டது" என்கிறார்.

இதே அரவட்லா பஞ்சாயத்தில் உள்ள கோட்டை காலனியைச் சேர்ந்த வஞ்சிரம், "கடந்த 20 ஆண்டுகளாகவே எங்களுக்குப் பட்டா இல்லை. இப்போது ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபிறகு பட்டாவுக்கு விண்ணப்பித்தோம். உடனே அதிகாரிகள் வந்து விசாரித்தார்கள். உடனடியாக பட்டா கொடுத்துவிட்டார்கள்.
இந்தப் பட்டாக்கள் வழங்கியது பற்றி கிராம நிர்வாக அலுவலர் தனசேகரன், "இந்த அரவட்லா வருவாய் கிராமத்தில் கோட்டை காலனி என்று ஒரு கிராமம் இருக்கிறது. இங்கே அதிகமாகப் பட்டியலின மக்கள்தான் வசித்து வருகிறார்கள். இங்குள்ள யாருக்குமே நிலம் கிடையாது. வீடு மனை பட்டா மட்டும்தான்.

முன்பு இவர்களுக்கு நத்தம் காலத்தில் வீடு இருந்தது. குடிசைப் போட்டுத் தங்கிவந்தார்கள். அதற்கு முறையான ஆவணங்கள் கிடையாது. ஒவ்வொருவரின் வாரிசுகள் வளர்ந்து குடும்பம் பெருகும்போது ஒரே வீட்டில் வாழ வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்தார்கள். அதை அறிந்துதான் அரசு இவர்களுக்கு 3 செண்ட் இடம் ஒதுக்கிக் கொடுத்தது.
இப்போது ஆட்சி மாறிய பிறகு அதற்குப் பட்டா கேட்டு விண்ணப்ப மனு எழுதிக் கொடுத்தார்கள். அதை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்குக் கொண்டுசென்றோம். அவர் வீடு கட்டி வசித்து வரும் அனைவருக்கும் முதல்வரின் ஆணைக்கு இணங்க, பட்டா வழங்க உத்தரவிட்டார். இப்போது மொத்தம் 29 குடும்பங்களுக்கு முழுமையாகப் பட்டா வழங்கப்பட்டு உள்ளது.

இதைப்போலவே குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் தவித்து வந்தனர். அதையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று, இப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. மேலும் கழிவு நீர் வெளியேறக் கால்வாய் வசதியும் செய்து கொடுத்துள்ளோம். அதற்கான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன" என்கிறார்.
ஏற்கெனவே அரசு சார்பில் வீடும் கட்டிக்கொடுத்திருந்தார்கள். அதற்குப் பட்டா இல்லாமல்தான் கஷ்டப்பட்டோம். இப்போது அந்த பெரிய குறை தீர்ந்துவிட்டது. இதைச் செய்து கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் அய்யாவுக்கு நன்றி" என்கிறார் பாஸ்கரன்.

ஆர் பாஸ்கரன், "பல வருஷமா இந்த காலனியில்தான் நான் வசித்து வருகிறேன். இந்தப் பகுதியில் 40 குடும்பங்களுக்கு மேல் இருக்கின்றன. இந்தப் பகுதிக்கு நீண்ட நெடுங்காலமா கழிவுநீர் கால்வாய் வசதியே இல்லாமல் இருந்தது. அதனால் பல சுகாதாரக் கேடுகள் வந்தன.
கடந்த ஆட்சியில் பல முறை கோரிக்கை வைத்தோம். ஆனால் எந்த வேலையும் நடக்கவே இல்லை. இப்போது முதலமைச்சராக ஸ்டாலின் வந்த பிறகு முதல்வரின் முகவரிக்கு ஒரு மனு கொடுத்திருந்தோம். அதை உடனே முதல்வர் பரிசீலனை செய்து கழிவுநீர் கால்வாய் கட்ட உத்தரவிட்டார். அதன் பின்னர் கால்வாயைக் கட்டிக் கொடுத்துள்ளார்கள்" என்கிறார்.

ஆர் வெங்கடேசன் என்பவர் வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுக்காவில் உள்ள ஏரிகுத்தி கிராமத்தில் வசித்து வருகிறார். "இங்கே உள்ள புதுமனையில் மொத்தம் 250 வீடுகள் உள்ளன. எனக்குத் தெரிந்து 35 வருடங்களாக இங்கே நாங்கள் வாழ்ந்து வருகிறோம்.
எனக்கு முன்பாகவே அப்பா இதே ஊரில்தான் பல காலமாக வாழ்ந்துவருகிறார். இதுவரை எங்களுக்குப் பாட்டா என்பதே இல்லை. எங்களுக்குப் பட்டா இல்லாததால் இதுவரை அரசின் எந்த வசதிகளும் கிடைக்கவில்லை. மின் இணைப்புக் கேட்டுப் போனால் பட்டா கேட்கிறார்கள். பள்ளியில்கூட பட்டா கேட்கிறார்கள். வருவாய் அதிகாரிகள் ஏதாவது நலத்திட்ட உதவிக் கேட்டுப் போனால் உடனே பட்டாதான் கேட்கிறார்கள்.

இந்த பட்டா இல்லாமல் இத்தனை ஆண்டுகள் நாங்கள் அவதிப் பட்டுக்கொண்டிருந்தோம். இப்போது அரசு புதியதாக 50 வீடுகளுக்குப் பட்டா கொடுத்திருக்கிறது. எங்கள் அப்பா காலத்திலேயே வாங்க முடியவில்லை. இப்போது என் காலத்தில் வாங்கி இருக்கிறோம். ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இதை உடனே செய்து தந்த முதல்வர் ஸ்டாலினுக்குக் கோடி புண்ணியம்" என்கிறார்
இது குறித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஐஏஎஸ், "இந்த 2 ஆண்டுகால ஆட்சியில் கிட்டத்தட்ட 8400 பேருக்கு மாவட்ட முழுமைக்கும் பட்டா வழங்கி இருக்கிறோம். அதைப்போன்று இந்த மாவட்டத்தில் குடிநீர் இணைப்புகள் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டு விட்டன. இணைப்பு இல்லாத வீடுகளே மாவட்டத்தில் இல்லை என்று தைரியமாகச் சொல்வோம்" என்கிறார்.













Click it and Unblock the Notifications