மீண்டும் அதிரடி சோதனை.. துரைமுருகன் மகனின் கல்லூரியில் ஐடி ரெய்டு.. நீடிக்கும் பதற்றம்!
வேலூர்: திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கல்லூரியில் மீண்டும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. பல இடங்களில் இந்தியா முழுக்க வருமான வரித்துறையும், தேர்தல் ஆணைய அதிகாரிகளும் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள் .
நேற்று முதல்நாள் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்றது. தேர்தல் பறக்கும்படை பிரிவினர் இந்த சோதனையை நடத்தினார்கள். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

என்ன சோதனை
சுமார் 14 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. இதில் கடைசியில் எந்த விதமான பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று துரைமுருகன் தரப்பு தெரிவித்து இருக்கிறது. சுமார் 40 அதிகாரிகள் துரைமுருகனுக்கு சொந்தமான வீடு மற்றும் கல்லூரிகளில் சோதனை செய்தனர்.

எவ்வளவு ரூபாய்
அதேபோல் அதிகாரிகள் தரப்பில் ரூபாய் 10 லட்சம் வரை இந்த சோதனையில் சிக்கியதாக செய்திகள் வெளியானது . கணக்கில் வராத பத்து லட்சம் ரூபாய் சிக்கியது. துரைமுருகன் வீட்டில் இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக செய்திகள் வெளியானது.

மீண்டும் சோதனை
இந்த நிலையில் தற்போது மீண்டும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கல்லூரியில் மீண்டும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். கதிர் ஆனந்திற்கு சொந்தமாக வேலூரில் இருக்கும் கிங்ஸ்டன் கல்லூரியில் சோதனை நடத்தி வருகிறார்கள். 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள்.

சிக்கல்
அதேபோல் பள்ளிக்குப்பத்தில் திமுக பகுதி செயலாளர் வீட்டிலும் தீவிர சோதனை நடக்கிறது. திமுக பகுதி செயலாளர் சீனிவாசன் வீட்டிலும் இந்த சோதனை நடக்கிறது. இதனால் தற்போது திமுகவினர் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications