உழைப்பு இருந்தால் யாரும் பதவிக்கு வரலாம்! பிரதமர் மோடியை புகழ்ந்த அமைச்சர் துரைமுருகன்!
வேலூர்: உழைப்பு இருந்தால் யாரும் எந்த பதவிக்கும் வரலாம் என்றும் டீ கடை நடத்திய மோடி உழைப்பால் பிரதமராக வந்திருக்கிறார் எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.
வேலூர் மாவட்டம் சேண்பாக்கத்தில் மகளிர் நியாய விலை கடையை திறந்து வைத்து பேசிய அவர் இதனைக் கூறினார்.
இதனிடையே உழைப்பால் யாரும் முன்னுக்கு வரலாம் என்பதற்கு பிரதமர் மோடியை துரைமுருகன் உதாரணமாக கூறி பேசியது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

நியாயவிலை கடை
வேலூர் மாவட்டம் சேண்பாக்கத்தில் பெண்கள் நியாய விலைக் கடையை திறந்து வைத்த அமைச்சர் துரைமுருகன், உழைப்பை பற்றி அங்கிருந்தவர்கள் மத்தியில் பாடம் எடுத்தார். அப்போது உழைப்பால் மோடி பிரதமராக உயர்ந்திருக்கிறார் என்பதை குறிப்பிட்ட அவர் திமுகவில் உழைத்தால் யாரும் எந்தப் பதவிக்கும் வரலாம் எனத் தெரிவித்தார். கட்சிக்காக வருடக்கணக்கில் உழைக்கும் பலர் தேர்தலின் போது மட்டும் எதிர்க்கட்சிக்காரன் கூட கரம் கோர்த்துவிடுவதாக வேதனை தெரிவித்தார்.

உண்மையான உழைப்பு
யார் யார் எப்படி என்பதும், அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதும் தனக்கு நன்கு தெரியும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். ஒரு கட்சிக்கு உழைப்பைக் கொடுக்கும் போது அது உண்மையான உழைப்பாக இருக்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அட்வைஸ் செய்தார்.

வண்டல் மண்
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக உட்கட்சிப் பூசல் நிலவி வரும் சூழலில், துரைமுருகன் பேச்சு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனிடையே ஏரிகளில் வண்டல் மண் அள்ளுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் துரைமுருகன் தமிழக அரசின் சாதனைகளையும், செயல்திட்டங்களையும் பட்டியலிட்டு பெருமிதம் தெரிவித்தார்.

அரசியல் ரீதியாக
உழைப்புக்கு பிரதமர் மோடியை துரைமுருகன் உதாரணமாக கூறி பேசியது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனிடையே நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை பொறுத்தவரை பேசும் பொது அவர் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை ஒளிவுமறைவின்றி பேசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications