சிந்தியுங்கள்.. ஆட்சியில் இல்லாத திமுக என்ன வாக்குறுதி தரும்.. வேலூரில் முதல்வர் பழனிசாமி பிரசாரம்
வேலூர்: மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத திமுக இப்போது என்ன வாக்குறுதி தரும் என்று தெரியவில்லை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை முன்னிட்டு அங்கு, அ.தி.மு.க. கூட்டணிக் கட்சி வேட்பளார் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வாணியம்பாடியில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், பொய் வாக்குறுதி என்ற மிட்டாயை மக்களிடம் கொடுத்து பொய்யான வெற்றி பெற்றது திமுக என்று விமர்சனம் செய்தார். ஸ்டாலின் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்றும், ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
அரசின் திட்டங்கள் என்ன என்று தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுவார் என்று பேசிய அவர், இன்னும் 10 ஆண்டுகள் கழித்து பார்த்தால் தமிழகம் விஞ்ஞான உலகமாக இருக்கும். எத்தனை லட்சம் மக்கள் வீடில்லாமல் இருந்தாலும் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் மிகவும் உயர்தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் அதிகமானோர் உயர்கல்வி படிக்கும் மாநிலம் தமிழ்நாடு என்றும் பெருமிதம் தெரிவித்தார். மேலும், தடையில்லா மின்சாரம் தரப்படுவதால் தமிழகத்திற்கு புதிய தொழிற்சாலைகள் வருகின்றன. அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களில் பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் 16,000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
நாளை மாலை 5 மணிக்கு கீழ்வைத்தியணான்குப்பத்திலும், 6 மணிக்கு, குடியாத்தத்திலும், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி அணைக்கட்டு, வேலூரில் வாக்கு சேகரிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications