புதுச்சேரி டூ ஹைதராபாத்.. வேலூருக்கு வந்த ஆம்னி பஸ்ஸில் அப்படி ஒரு சம்பவம்.. தெய்வமாக மாறிய டிரைவர்
வேலூர்: வேலூரில் ஆம்னி பஸ் டிரைவருக்கு ஓடும் பேருந்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போது தன் உயிர் பிரிய போகும் சமயத்திலும், சாலையோரம் பஸ்சை நிறுத்தி 38 பயணிகளை காப்பாற்றினார் அந்த டிரைவர். புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்ற ஆம்னி பஸ்ஸில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
ஆந்திர மாநிலம் சித்தூர் ராமசந்திராபுரம் பகுதியை சேர்ந்த 55 வயதாகும் பாஸ்கர் ஆந்திராவில் உள்ள தனியார் ஆம்னி பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இதய பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வந்த அவர் அதற்காக கடந்த ஓராண்டாக மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். இவருடைய மனைவி பேபிராணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

பாஸ்கர் கடந்த ஆகஸ்ட் 21-ந் தேதி புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்ற ஆம்னி பஸ்சை ஓட்டிச் சென்றுள்ளார். அதில் 38 பயணிகள் பயணம் செய்திருக்கிறார்ள். ஆகஸ்ட் 21ம் தேதி இரவு 11 மணியளவில் அந்த பஸ் வேலூர் சங்கரன்பாளையம் பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென டிரைவர் பாஸ்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த பாஸ்கர், பேருந்தை உடனடியாக சாலையோரத்தில் நிறுத்துவிட்டு,பஸ் ஸ்டியரிங் மீது மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கிளீனர் உடனடியாக பயணிகள் உதவியுடன் பாஸ்கரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பாஸ்கரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதையடுத்து அவருடைய பிணம் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. டிரைவர் பாஸ்கர் நெஞ்சுவலியால் உயிரிழந்தது குறித்து அவருடைய குடும்பத்தினர் மற்றும் ஆம்னி பஸ் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் சித்தூரில் இருந்து மாற்று டிரைவர் வேலூருக்கு விரைந்து வந்து ஆம்னி பஸ்சை ஹைதராபாத்திற்கு நோக்கி ஓட்டி சென்றார். இதுகுறித்து பேபி ராணி அளித்த புகாரின் பேரில் வேலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வேலூரில் ஓடும் பஸ்சில் நெஞ்சு வலியால் துடித்த டிரைவர் ஆம்னி பஸ்சை சாலையோரமாக நிறுத்தி 38 பயணிகளை காப்பாற்றி உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications