வாணியம்பாடியில் நள்ளிரவில் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் கூட்டமாக குவிந்த மக்கள்.. ஆடிப்போன போலீஸ்
திருப்பத்தூர்: ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் போர் எதிரொலியாக வாணியம்பாடியில் நள்ளிரவில் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் நிரப்ப வாகனங்கள், கேன்களுடன் ஏராளமானோர் குவிந்தனர். போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் என்று வதந்தி பரவியதால் ஏராளமான மக்கள் கேன்களுடன் பெட்ரோல் பங்குகளில் குவிந்தனர்
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடுத்துள்ளனர். இதற்கு ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக வளைகுடாவில் உள்ள சவுதி அரேபியா, துபாய், ஓமன், துருக்கி, கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ மையங்களை குறி வைத்து ஈரான் பலமுனை தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் இஸ்ரேல் மீது சரமாரியாக தாக்குல் நடத்தி வருகிறது.

இந்தப் போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட போகிறது என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.
இதனைத்தொடர்ந்து வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். பலர் கேன்களுடனும், வாகனங்களும் குவிந்தனர். அவர்கள் வாணியம்பாடி பஸ் நிலையம், நியூ டவுன், பைபாஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் நீண்டநேரம் வரிசையில் நின்று கொண்டு பெட்ரோல் மற்றும் டீசலை தங்கள் வாகனங்களிலும், கேன்களிலும் நிரப்ப அலைமோதினார்கள்.
இதனால் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பரபரப்பான சூழல் நிலவியது. பெட்ரோல் நிலைய ஊழியர்கள் இது வதந்தி என்று கூறி அவர்களை கட்டுப்படுத்த முயன்றபோது, நம்ப மறுத்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்த வாணியம்பாடி நகர போலீசார் பெட்ரோல் நிலையங்களுக்கு விரைந்து வந்தனர். பெட்ரோல்-டீசல் விலை உயரும் என்பது வதந்தி என்று கூறி கூடியிருந்த அனைவரையும் கலைந்து போகச் செய்தனர். தொடர்ந்து பெட்ரோல் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்கள் காரணமாக வாணியம்பாடி முழுவதும் நேற்று நள்ளிரவு பரபரப்பாக இருந்தது.












Click it and Unblock the Notifications