பரோல் முடிந்தது.. 150 நாட்களுக்கு பிறகு புழல் சிறை செல்கிறார் பேரறிவாளன்
ஜோலார்பேட்டை: வேலூரை அடுத்த ஜோலார்பேட்டையிலிருந்து 150 நாட்களுக்கு பிறகு புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுகிறார் பேரறிவாளன்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் 7 தமிழர்களை விடுவிக்க வேண்டும் என பல தரப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது மகன் பேரறிவாளனுக்கு தொடர் சிகிச்சை அளிக்க பரோல் வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அற்புதம்மாள் மனு அளித்திருந்தார்.

அதன்படி அவருக்கு கடந்த மே 28 ஆம் தேதி ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. பேரறிவாளனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பரோலை நீட்டிக்கக் கோரி அற்புதம்மாள் மீண்டும் மனு அளித்திருந்தார். அதன்படி ஜூன் மாதம் 28ஆம் தேதி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
பேரறிவாளன் உடல்நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் பரோல் நீட்டிக்கப்பட வேண்டும் என அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். அதன்பேரில் மீண்டும் பரோல் நீடிக்கப்பட்டது. நான்காவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டு பேரறிவாளன் தனது வீட்டில் இருந்து வந்தார்.
நிபந்தனைகளின் படி தினமும் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக தொற்றுக்காக பேரறிவாளன் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில் தனது மகனுக்கு தொடர் சிகிச்சைக்காக பரோலை நீட்டிக்க வேண்டும் என அவரது தாய் அற்புதம்மாள், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். அதன்படி மேலும் ஒரு மாத காலத்திற்கு பரோல் நீட்டிக்கப்பட்டது. அதாவது அக்டோபர் 26 ஆம் தேதி வரை பரோல் நீட்டித்து உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் இன்றுடன் பரோல் காலம் முடிவடைவதால் ஜோலார்பேட்டையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பேரறிவாளன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். 150 நாட்கள் பரோலுக்கு பிறகு பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications