இலங்கைக்கு சென்ற போது.. மோடிக்கு கச்சத்தீவு நினைவுக்கு வரலயா.. பாஜகவை விளாசிய ஸ்டாலின்
வேலூர்: கச்சத்தீவு பற்றி பேசும் மோடி, சீனா விஷயத்தில் வாய் திறந்தாரா?.. இலங்கையை கண்டிக்கவும் துணிச்சல் இல்லை. சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை என்று வேலூரில் இன்று முதல்வர் ஸ்டாலின்பேசினார்.
தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. வேலூரி முதல்வர் ஸ்டாலின் இன்று திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது ஸ்டாலின் கூறியதாவது:-

சிஏஏ சட்டம், நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
நகரி - திண்டிவனம் ரயில்பாதை விரைவில் முடிக்கப்படும்.
வேலூர் விமான நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.
100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்பட்டு சம்பளம் 400 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
பாஜக அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்.
ஜிஎஸ்டி சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்படும்.
சேர்ந்தமங்கலத்தில் ரயில் நிலையம் அமைக்கப்படும்.
சாதிவாரி கணக்கெடுப்பும், வறுமை கோட்டிற்கு கீழே உள்ள, மிகுந்த கணக்கெடுப்பும் 5 ஆண்டிற்கு ஒரு முறை நேரத்தில் மத்திய அரசால் நடத்தப்படும்.
மக்களின் ஆதரவே திராவிட மாடலின் சாதனை ஆகும். மக்கள் விரோத பாஜகவை திமுக ஆதரிக்காது. இலங்கைக்கு 2 முறை பிரதமர் மோடி பயணம் செய்தார். அப்போது பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு பற்றி நினைவுக்கு வரவில்லையா?.. கூட்டாட்சி என்று பேசிக்கொண்டு இருக்கும் பாஜக காட்டாட்சி நடத்திகொண்டு இருக்கிறது. 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக போரிட்டு தான் கட்சத்தீவை மீட்க வேண்டும் என நீதிமன்றத்தில் கூறியது.
சீனா விஷயத்தில் மோடி வாய் திறந்தாரா?.. அருணாசலப்பிரதேசத்தில் உள்ள 30 க்கும் மேற்பட்ட இடங்களை தங்கள் இடம் என சீன மொழியில் சீனா அறிவித்துள்ளதே.. இதற்கு என்ன பதில் சொல்ல போறிங்க... இலங்கையை கண்டிக்கவும் துணிச்சல் இல்லை. சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் கச்சத்தீவை பற்றி பேசலாமா?... மோடி போடும் நாடகம் எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகளில் அமலாக்கத்துறை, ஐடி, சிபிஐ என ஒன்றிய அரசின் அமைப்புகளை பாஜகவின் கைப்பாவையாக மாற்றி அவர்களை ரெய்டுக்கு அனுப்புறது.. அப்புறம் பாஜகவுக்கு நிதியாக தேர்தல் பத்திரங்களை வாங்குறதுன்னு 8,000 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறார்கள். இது வெளியில் தெரிந்ததால் மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இதனால் தான் மோடி ஏதேதோ பேசுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications