குண்டானுக்குள் பேட்டரி..தொட்டால் ஷாக்! “இரிடியம்” ஆயிரம் சதுரங்க வேட்டை வந்தாலும் திருத்த முடியாது!
ராணிப்பேட்டை: அலுமினிய குண்டானுக்குள் பேட்டரி வைத்து தொட்டால் ஷாக் அடிக்கும் வகையில் செட் செய்து இரிடியம் விற்பதாக ஒரு லட்சத்து 64 ஆயிரம் மோசடி செய்த என்எல்சி ஊழியர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே இரிடியம் எனக் கூறி கோவில் கலசங்களை வைத்தும், பழைய சட்டி பானைகளை வைத்தும் ஏமாற்றும் கும்பல்கள் நடமாட்டமும், மோசடியில் லட்சக்கணக்கில் பணம் இழப்பதும் வாடிக்கையாகி வருகிறது.
கடந்த நில நாட்களுக்கு முன்னர் கூட முன்னாள் நடிகரும் தற்போதைய தொழிலதிபருமான விக்னேஷிடம் இரிடியம் எனக் கூறி பல லட்சம் ரூபாய் பணத்தை மோசடி நபர் வாங்கி ஏமாற்றிய செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரிடியம் மோசடி
சதுரங்க வேட்டை போல் ஆயிரம் படம் வந்தாலும் உங்களை திருத்த முடியாது என்பது போல், இரிடியம் மோசடி செய்திகள் நாளுக்கு நாள் வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் தான் அலுமினிய குண்டானுக்குள் பேட்டரி வைத்து தொட்டால் ஷாக் அடிக்கும் வகையில் செட்டப் செய்து இரிடியம் விற்பதாக ஒரு லட்சத்து 64 ஆயிரம் மோசடி செய்த என்எல்சி ஊழியர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த சாத்தம்பாக்கம் சேர்ந்தவர் சனாவுல்லா மகன் ஷாகீர் எலக்ட்ரீசியன் இவர் ரேவரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஷாகிர் சென்னை தாம்பரத்தில் வேலை செய்தார்.

மீண்டும் அதிர்ச்சி
அப்போது அதே பகுதியில் ராஜன் என்பவர் மூலமாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புலவன்குப்பம் பகுதியை சேர்ந்த உலகநாதன் உடன் அறிமுகம் ஏற்பட்டது. உலகநாதன் தன்னிடமுள்ள இரிடியத்தை விற்பனை செய்தால் அதிகம் பணம் கிடைக்கும் ரூபாய் 4 லட்சம் கொடுத்து இரிடியத்தை வாங்கிச் செல்லுமாறு ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பி ஷாகிர் தனது மனைவியின் தாய் மாமன் மகன் சீனிவாசன் என்பவருடன் தாம்பரம் சென்று உலகநாதன் மற்றும் ராஜன் ஆகியோரிடம் ஒரு ஆண்டுக்கு முன்பு ரூபாய் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் முன்பணமாக கொடுத்துள்ளனர். மேலும் கூகுள் பேய் மூலம் உலகநாதன் வங்கி கணக்கிற்கு 14,000 அனுப்பினர்.

என்எல்சி ஊழியர் மீது புகார்
இந்நிலையில் நேற்று முன்தினம் உலகநாதன் வீட்டிற்கு ஷாகிர் மற்றும் சீனிவாசன் சென்றனர். அங்கு உலகநாதன் மற்றும் அவரின் நண்பர் நெய்வேலி வட்டம் 3 சேர்ந்த என்எல்சி ஊழியர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஒரு பொருளைக் காட்டி இதுதான் இரிடியம் எனக்கூறி கையை வைத்து பார்க்க கூறியுள்ளனர். அப்போது அதனை ஷாகீர் தொட்டபோது ஷாக் அடித்து உள்ளது. அப்போது உலகநாதன் இது ரொம்ப பாவமாக உள்ளது எனவே மீதமுள்ள 2 லட்சத்து 36 ஆயிரம் கொடுத்து விட்டு எடுத்து செல்லுங்கள் என்றனர். தங்களிடம் தற்போது பணம் கையிருப்பு இல்லை வங்கி கணக்கில் உள்ளதாக ஷாகீர் கூறினார்.

அதிரடி கைது
இதனால் ஆத்திரமடைந்த உலகநாதன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஷாகிர் மற்றும் சீனிவாசனை இரும்பு பைப்பால் தாக்கினார். இதுகுறித்து முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்தில் ஷாகீர் புகார் அளித்தார். அதன்படி உலகநாதன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரை காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும் இரிடியம் என கூறி ஏமாற்றிய பாக்ஸில் இருந்த அலுமினியத் தகடுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜனை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications