அன்று மாற்று அரசியலை முன்வைத்ததாக புகழாரம்.. இன்று மநீமவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை- செ.கு.தமிழரசன்
Recommended Video
குடியாத்தம்: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் இனி வருங்காலங்களிலும் கூட்டணி இல்லை என இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் தெரிவித்துள்ளார்.
கடந்த 14 மாதங்களுக்கு முன்னர் கட்சி தொடங்கிய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை கமல் மேற்கொண்டார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 23-ஆம் தேதி கமல் கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்புவதாக இந்திய குடியரசு கட்சி தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான செ.கு.தமிழரசன் தெரிவித்தார். இதையடுத்து கமல்ஹாசனை சந்தித்து கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.

கமல் கட்சி
அப்போது செய்தியாளர்களை சந்தித்த செ.கு. தமிழரசன் பேசுகையில் மாற்று அரசியலை கமல்ஹாசன் முன்வைப்பதால் அக்கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்புகிறோம் என தெரிவித்தார். அதன்படி காஞ்சிபுரம் எம்பி தொகுதியானது செ.கு தமிழரசன் கட்சிக்கு காஞ்சிபுரம் எம்பி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சக்தி
ஆனால் அக்கட்சியின் வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கமல் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெறாவிட்டாலும் தமிழகத்தில் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

கூட்டணி முடிவு
12 மக்களவை தொகுதிகளில் 3ஆவது இடத்தை பிடித்த கமல் கட்சி 15 லட்சம் வாக்குகளை குவித்தது. அதன் வாக்கு சதவீதமும் நல்ல நிலையில் இருந்தது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்துடனான கூட்டணி முடிந்து விட்டது என செ.கு. தமிழரசன் தெரிவித்துள்ளார்.

கூட்டணி
இது குறித்து அவர் குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தோம். தற்போது அந்த கூட்டணி முடிந்து விட்டது. இனி வரும் காலங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி இல்லை. உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பின்னர் கூறுகிறேன் என்றார் செ.கு. தமிழரசன்.












Click it and Unblock the Notifications