அய்யய்யோ என்ன இது.. 5 அடி நீளத்திற்கு.. ஆம்பூர் பஸ் நிலையத்தையே அலற விட்ட அழையா விருந்தாளி
வேலூர்: ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் நிறுத்தபட்டிருந்த இருசக்கர வாகனத்தினுள் நுழைந்த அழையா விருந்தாளியை பார்த்து அலறியடித்து ஓடினர் மக்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் சுரேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை சாலையோரம் விட்டு விட்டு அருகில் இருந்த துணிகடைக்கு சென்றுள்ளார்.
அதற்குள்ளாகத்தான் நடந்துள்ளது அந்த பரபரப்பு சம்பவம். அழையாத விருந்தாளி, அதுவும் 5 அடி நீளமுள்ள விருந்தாளி அங்கே வந்துவிட்டார்.

5 அடி நீளம்
ஆம்.. சுரேஷின் இருசக்கர வாகனத்தினுள் சுமார் 5 அடி நீளமுள்ள நாகபாம்பு ஏறிச் சென்று சீட்டுக்கு அடியில் சென்றுள்ளது. இதைக் கண்ட பொதுமக்கள் பாம்பு, பாம்பு என கத்தியபடி ஓட்டம் பிடித்தனர்.

பாம்பு
சுரேஷ் கடைக்குள் இருந்து வேகமாக வந்து இரு சக்கர வாகனத்தை எடுக்க முற்பட்டபோது அங்கிருந்த பொதுமக்கள் பாம்பு இருப்பதை தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்து வாகனத்தை அங்கேயே விட்டு ஓட்டம்பிடித்தார். அப்பகுதியில் கடை வைத்திருந்தவர்களும் ஆச்சரியத்தோடு ஓடி வந்தனர்.

போராட்டம்
அப்பகுதியில் இருந்த சிலரின் உதவியுடன் சுமார் அரை மணி நேரம் பாம்பை அகற்ற போராடினார் சுரேஷ். சீட்டுக்கு அடியில் நுழைந்த பாம்பை பிடிக்க முடியாததால் பின்னர் ஆம்பூர் நடராஜபுரம் பகுதியில் இருந்து பாம்பு பிடிக்கும் வாலிபர் அசோக்கை வரவழைத்தனர்.

1 மணி நேரம்
மீண்டும் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர், பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் பாம்பை அருகில் உள்ள ஆம்பூர் காட்டுப்பகுதியில் விட்டனர். இதனால் ஆம்பூர் பேருந்து நிலையம் சுமார் ஒரு மணி நேரமாக பரபரப்பாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications