வாணியம்பாடிக்கு விடிவு பிறக்குது.. பல நாள் பிரச்சனைக்கு வரப்போகிறது தீர்வு.. பறந்த உத்தரவு
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நீர்நிலைகளில் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்.. அரைகுறையாக அகற்றினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகரப்பகுதி மற்றும் கிராமப்புற பகுதிகளில் பல இடங்களில் நீர்நிலை கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழித்தடம் இல்லாத நிலை இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது,

இந்த பிரச்சனை காரணமாக வாணியம்பாடி அரசு மருத்துவமனை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மழை நீரோடு கழிவுநீர் தேங்கி நிற்கும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக அந்த தொகுதி எம்எல்ஏ உள்பட பலர், திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இது தொடர்பாக பலமுறை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை வைத்தும் துறை சார்ந்த அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மழை காலங்களில் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மழைநீரோடு கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலை தொடர்கதையாகி வருவதால் நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள்.
அண்மையில் தொலைக்காட்சியில் செய்தி வெளிவந்ததையடுத்து இன்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும் போக்குவரத்து ஆணையாளரும்மான கஜலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் வாணியம்பாடி அரசு மருத்துவமனை மற்றும் வளையாம்பட்டு, செட்டியப்பனூர் கூட்டுச்சாலை ஆகிய இடங்களில் மழைநீர் கழிவு நீரோடு தேங்கி நிற்பதை ஆய்வு மேற்கொண்டு அதற்கான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போது வாணியம்பாடியில் நகரப் பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்பு உள்ளதாகவும் ஒரு கிலோமீட்டர் அளவிற்கு ஆக்கிரமிப்பு அகற்றாமல் உள்ளதாகவும் தெரியவந்தது. இதையடுத்து போக்குவரத்து ஆணையர், நகராட்சி கமிஷனர் மற்றும் வருவாய்த்துறையினரோடு இணைந்து முழுமையாக நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்புஅதிகாரி கஜலட்சுமி வலியுறுத்தினார்.
ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றினால் தான், நீர்நிலைகள் செல்லக்கூடிய கால்வாய்கள் முறையாக இருக்கும் என்றும், உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து தேசி நெடுஞ்சாலைகள் அதிகளவில் விபத்து ஏற்படும் இடங்களையும் அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலருடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications